சக்கர நாற்காலி இல்லை -நோயாளியை கால்களை பிடித்து இழுத்து சென்ற அவலம் (காணொளி)


சக்கர நாற்காலி இல்லாத காரணத்தினால் மருத்துவமனையில் நோயாளியின் காலை பிடித்து இழுத்துச் சென்ற சம்பவம் தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் இடம்பெற்றுள்ளது.

கடந்த மார்ச் 31ஆம் திகதி 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரை அவரது பெற்றோர் இந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தனர். அதிகளவில் அவர் மது அருந்தி இருந்தால் அவரால் நடக்கக் கூட முடியவில்லை. இரவு முழுக்க நோயாளிகள் தங்கும் அறையில் தனது மகனை அவரது பெற்றோர் வைத்திருந்தனர்.

அதன்பின்னர் மறுநாள் அவருக்குச் சிகிச்சை அளிப்பதற்காக இரண்டாவது மாடியில் உள்ள விடுதியில் சேர்க்குமாறு பணியில் இருந்த மருத்துவர் கூறியுள்ளார்.

சுயநினைவு இன்றி இருந்த தனது மகனை மாடிக்கு அழைத்துச் செல்ல சக்கர நாற்காலியை அவரது பெற்றோர் தேடி உள்ளனர். சக்கர நாற்காலி கிடைக்காத காரணத்தினால் மகனின் இரண்டு கால்களையும் பிடித்துப் பெற்றோர் தரதரவென லிப்ட்டுக்குள் இழுத்துச் சென்றுள்ளனர்.

இதனைக் கண்ட மற்ற நோயாளிகள் அவர்கள் இழுத்துச் சென்றதைப் பார்த்து செல்போனில் காணொளி எடுத்துள்ளனர். அந்த காணொளியை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததால் அது தற்போது வைரலாகப் பரவி வருகிறது.