வவுனியாவில் இரவோடு இரவாக அமைக்கப்பட்ட இராணுவ முகாம்

வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக நிரந்தரமாக இராணுவ முகாம் ஒன்று இரவோடு இரவாக அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் நடைபெற்றபோது புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இராணுவ காவலரணொன்று அமைக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றிருந்தது.

அதன் பின்னரும் குறித்த காவலரண் அகற்றப்படாத நிலையில் இராணுவத்தினர் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

இந் நிலையில் நேற்று இரவு கனரக வாகனங்கள் சகிதம் வருகை தந்த இராணுவத்தினர் குறித்த பகுதியில் நிரந்தரமாக பாரியளவிலான இராணுவ முகாம் ஒன்றை அமைத்துள்ளனர்.

இதன் காரணமாக பயணிகளும் குறித்த பகுதியில் உள்ள பொதுமக்களும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.