தவறிழைக்கும் பிக்குகளை விசாரிக்க வேண்டும்: முன்வைக்கப்பட்ட யோசனை


தவறிழைக்கும் மகா சங்கத்தினர் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தனியான பிக்குகள் நீதிமன்றமொன்று அமைக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஒழுக்கக்கேடான செயற்பாடுகளில் ஈடுபடும் பிக்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மேற்குறித்த (பிக்கு) நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கக் கூடிய வகையிலான சட்டமூலம் உடனடியாக நடைமறைப்படுத்தப்பட வேண்டுமெனவும், இவ்வாறான சம்பவங்களைப் பயன்படுத்தி புத்த சாசனத்திற்கு எதிராக செயற்படும் குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் மகா சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

அத்தோடு ஒருசில பிக்குகளின் கீழ்த்தரமான இழிவான செயல்களை பொதுவெளியில் அம்பலப்படுத்தி இணையத்தில் வெளியிட்டு பௌத்த உறவை சிதைத்து, குறித்த அமைப்புக்களுக்கு பெருமளவில் நிதி கிடைத்து வருவதாகவும், அமரபுர நிகாய பிரிவின் பதிவாளர் அக்குரல மஞ்சுளத்திஸ்ஸ தேரர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், தவறிழைக்கும் எந்த பிக்குகளையும் பாதுகாப்பதில் தமக்கு நம்பிக்கை இல்லை என தெரிவித்த அக்குரல மஞ்சுளத்திஸ்ஸ தேரர், ஒழுக்காற்று விசாரணையின் பின்னர் அவ்வாறான பிக்குகளை துறவறத்திலிருந்து அவர்களின் நிகாய தலைவர்களால் வெளியேற்ற முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

அவ்வாறில்லாதபோது தவறு செய்யும் பிக்குமாரை தண்டிக்க பொலிஸாருக்கும் நீதிமன்றத்துக்கும் தடையேதும் இல்லை எனவும் தவறிழைக்கும் பிக்குமாரைத் தனிப்பட விமர்சிப்பதற்குப் பதில் முழு பௌத்த மதத்தையும் திட்டமிட்ட வகையில் தாக்குவதாகவும் அக்குரல மஞ்சுளத்திஸ்ஸ தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.