நேபாளத்தில் போராட்டம் தீவிரம்.. இந்திய எல்லையில் கடும் பாதுகாப்பு


நேபாளத்தில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் சமூக ஊடகத் தடை காரணமாக இந்தியா - நேபாள எல்லையிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், நேபாளத்தில் தீவிரமடைந்துள்ள போராட்டம் காரணத்தினால் அந்நாட்டு பிரதமர் கே.பி. சர்மா ஓலி பதவி விலகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேபாளத்தில் ஊழல் மற்றும் பொருளாதார சீரழிவுக்காக அரசைக் கண்டித்து நேபாள மக்கள் பாரிய போராட்டம் ஒன்றை நடத்தி வருகின்றனர்.

இந்த அழுத்தம் காரணமாகவே அவர் பதவி விலகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

முன்னதாக, நேபாளத்தில் யூடியூப், இன்ஸ்டாகிராம் மற்றும் முகப்புத்தகம் உட்பட 26 சமூக வலைதள செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக இளைஞா்கள் மாபெரும் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் அரசுக்கு எதிரான போராட்டமாக மாறிய நிலையில், அந்நாட்டு பிரதமர் தற்போது பதவி விலகியுள்ளார்.

நேபாளத்தில் இதுவரை காலமும் கம்யூனிஸ்ட் கட்சி - ஐக்கிய மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (சிபிஎம்-யுஎம்எல்) மற்றும் நேபாள காங்கிரஸ் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சியை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில், அரசின் மிகப்பெரிய ஊழல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு எதிராக மக்களின் போராட்டமானது வன்முறையாக மாறியது.

இதனையடுத்து, போராட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குப் பொறுப்பேற்று நேபாள காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த உள்துறை அமைச்சர் மற்றும் விவசாயத் துறை அமைச்சர்கள் பதவி விலகினர்.

இதன்படி, தற்போது நேபாள பிரதமர் பதவி விலகியுள்ள நிலையில், அவர் பதவியேற்றதில் இருந்து அரசின் பல்வேறு துறைகளில் ஊழல் நடைபெற்று வருவதாகக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதனால் தற்போது வரை நாட்டில் போராட்டம் பாரியளவில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேபாளத்தில் உள்ள இலங்கை மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என நேபாளத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், தொடர்ந்தும் இது தொடர்பில் அவதானம் செலுத்தி வருவதாக நேபாளத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.