லண்டனில் இடம்பெற்ற கரிநாள் போராட்டம்! இலங்கை அரசு அதிருப்தி

 இலங்கையின் தேசிய சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் பிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திற்கு இலங்கை அரசாங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

இராஜதந்திர ரீதியில் நடைபெற்ற இந்தப் போராட்டம் தொடர்பிலேயே இலங்கை அரசாங்கம் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

76ஆம் சுதந்திர தின நிகழ்வுகளை எதிர்த்து தமிழ் புலம்பெயர் தரப்புக்கள் மேற்கொண்ட போராட்டம் அதிருப்தி அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பிலான அதிருப்தி, லண்டனுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக பிரித்தானிய அரசாங்கத்திற்கு வெளிப்படுத்தப்படும் என கூறியுள்ளார்.

புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடிகள் மற்றும் கறுப்பு கொடிகளை ஏந்தி சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டு லண்டனில் போராட்டம் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.