பைடனுக்கு வாக்களிக்க மாட்டேன் : சர்ச்சையை ஏற்படுத்திய எலான் மஸ்கின் பேச்சு!

அமெரிக்காவில் வசித்து வரும் உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க், அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வரிசையில் டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளரான எலான் மஸ்க் சமீபத்தில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

அதாவது, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனுக்கு வாக்களிப்பதை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

அதில், மின்சார வாகனங்களுக்கான உச்சி மாநாடு அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடைபெற்ற போது, அதில் கலந்து கொள்ள டெஸ்லா நிறுவனத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதன் காரணமாகவே, அவர் மேற்படி தீர்மானத்தை எடுத்துள்ளதாக குறிபபிட்டுள்ளார்.

அப்படியென்றால், அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கு வாக்களிப்பீர்களா என்று கேட்டதற்கு, இந்த முடிவு டிரம்ப்பிற்கான ஆதரவை குறிக்காது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜோ பைடனுக்கு வாக்களித்ததாக எலான் மஸ்க் வெளிப்படையாக தெரிவித்து இருந்தார்.

இருப்பினும் தேர்தலுக்கு பிறகு, ஜோ பைடனுக்கும், எலான் மஸ்க்கிற்கும் இடையிலான உறவு சர்ச்சைக்குரிய வகையில் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.