உள்நாட்டுக் கலவரத்தின் போது நபர் ஒருவர் பொலிஸாரினால் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தலைநகர் டாக்காவில் பல வாரங்களாக நிலவிய அமைதியின்மையைத் தொடர்ந்து முந்தைய அரசாங்கத்திலிருந்த மேலும் 6 முக்கிய நபர்களுக்கு எதிராகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த சம்பவம் தொடர்பில் பிரஜையொருவர் தாக்கல் செய்துள்ள வழக்கில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்டோர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் 19ஆம் திகதியன்று முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் உத்தரவில், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக பங்களாதேஷ் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பங்களாதேஷின் செயின்ட் மார்ட்டின் தீவில் ராணுவ தளமொன்றை நிறுவ அமெரிக்கா விரும்புவதாகவும், தற்போது பங்களாதேஷில் நிலவும் பதற்றமான சூழலுக்கு அமெரிக்காவே காரணம் என்றும் ஷேக் ஹசீனா குற்றம்சாட்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், ஷேக் ஹசீனாவின் வெளியேற்றத்தில் எங்களுக்கு தொடர்பு இல்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.