முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் தந்தையை இழந்த மாணவி: முதலிடம் பெற்று சாதனை

முள்ளிவாய்க்கால் (Mullivaikal) யுத்தத்தில் தந்தையை இழந்த மாணவி உயிரியல் பிரிவில் கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

அண்மையில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியது.

கிளிநொச்சி மாவட்டத்தில் உயிரியல் பிரிவில் மணிவண்ணன் துஷாகா என்ற மாணவி 3A பெறுபேறுகளை பெற்று கிளிநொச்சி மாவட்டத்தில் முதலிடத்தையும் அகில  இலங்கை ரீதியில் 124 வது இடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளார்.

முள்ளிவாய்க்கால் இறுதிக்கட்ட போரிலே தன்னுடைய தந்தையை இழந்த குறித்த மாணவி தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வந்துள்ளார்.

பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கல்வி கற்று உயர்தர பரீட்சைக்கு தோற்றிய இவர் 3A பெறுபேறுகளை பெற்று மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ள நிலையில் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

முள்ளிவாய்க்கால் யுத்தத்திலே தந்தையை இழந்த மாணவி அரச உத்தியோகத்தராக கிளிநொச்சி மாவட்ட செயலகத்திலே பணியாற்றி வருகின்ற தாயாரினுடைய அரவணைப்பில் வாழ்ந்து பல்வேறு இன்னல்களுக்கு மத்தியிலே குறித்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

தன்னுடைய கணவரின் கனவாக இருந்த மகள் வைத்தியராக வரவேண்டும் என்ற கனவை தனது மகள் நிறைவேற்றியுள்ளதாகவும் இதனால் தான் பெருமை கொள்வதாகவும் மாணவியின் தாயார் தெரிவித்தார்.

ஒரு பெண் தலைமைத்துவ குடும்பமாக பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்து தன்னுடைய இரண்டு பிள்ளைகளையும் கற்பிக்க வேண்டும் என்கின்ற ஒரே நோக்கத்திலே தான் உழைத்து வந்ததாகவும் அவ்வாறு தன்னுடைய மகள் இந்த சாதனையை நிலைநாட்டி இருக்கின்றமை தனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.