பௌத்த பிக்குகளால் குறி வைக்கப்படும் முல்லைத்தீவு மாவட்டம்: செல்வம் எம்.பி ஆதங்கம்

முல்லைத்தீவு மாவட்டம் தென்னிலங்கை இனவாதிகள், பௌத்த பிக்குகளால் குறி வைக்கப்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவிக்கையில், குருந்தூர் மலை தொடர்பான தீர்ப்பை மாற்ற வேண்டும் என்ற அழுத்தங்கள் , உயிர் அச்சுறுத்தல் பிரயோகிக்கப்பட்டுள்ளதால் நீதிபதி அவர்கள் நாட்டைவிட்டு சென்றிருக்கின்றார் என்பது அனைவரும் அறிந்த உண்மை.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பணிபகிஷ்கரிப்பதென்பது ஒரு விடயம். ஆனால் அவர்களுடைய பதவிகளை ராஜினாமா செய்வதென்பது என்னைப்பொறுத்தமட்டிலே சாலச்சிறந்ததாக இருக்காது.

ஏனென்றால் ஒட்டுமொத்தமாக ராஜினாமா கடிதத்தை கொடுக்க வேண்டும். ஆனால் தற்போது இருக்கின்ற சூழல் குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டம் தென்னிலங்கை இனவாதிகள், பௌத்த பிக்குகளால் குறி வைக்கப்படுகின்றது.

இவ்வாறு குறிவைக்கப்படுகின்ற சூழலிலே நாங்கள் இந்த விடயத்தினை செய்வோமாக இருந்தால் நாடாளுமன்றத்திலே கொண்டு செல்வதற்கான வாய்ப்புகள் அற்று போவதாக இருக்கும்.

சர்வதேசத்திடம் உரிமையோடு கேட்கும் விடயங்கள் அனைத்தும் கேட்க முடியாத சூழல் உருவாகும். பகிஷ்கரிக்கின்ற விடயத்திலே மீள் பரிசீலனை செய்யலாம்.

ஆனால் நிலங்கள் பறிபோய் கொண்டிருக்கின்ற சூழலிலே தட்டிக்கேட்கின்ற , நிறுத்துகின்ற வழிகளை கையாளுகின்ற ஒரு சூழல் சாத்தியமற்றது என்பது என்னுடைய கருத்து.

ஏனென்றால் தென்னிலங்கையிலே இருக்கின்ற இனவாதிகள் கூடுதலாக பௌத்த பிக்குகள் எங்களுடைய பூர்வீகத்தை ஒழிப்பதற்காக தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்ற வரலாற்றை சிதைப்பதற்காக முழு மூச்சோடு செயற்பட்டு கொண்டு வருகின்றார்கள்.

இந்நிலையிலே நாடாளுமன்றத்தை துறந்தோமாக இருந்தால் நிலத்தையோ, மக்களுடைய பிரச்சினைகளையோ தட்டிக்கேட்கின்ற நிலைமை அல்லது சர்வதேசத்திடம் எடுத்து சொல்கின்ற நிலமைகள் சற்று மாறாக அமைந்துவிடும்.

ஆகவே இந்த விடயத்திலே இந்த காலகட்டத்தில் சரியானதொன்று அல்ல என்பது என்னுடைய கருத்து என மேலும் தெரிவித்தார்.