முல்லைத்தீவில் அகழப்படும் மனித புதைகுழி - இதுவரை இனங்காணப்பட்ட 16 இற்கும் மேற்பட்ட உடல எச்சங்கள்

 இரண்டாம் இணைப்பு

கொக்குத்தொடுவாய் மத்தி பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் அகழ்வின் போது தற்போது வரை 16 மனித எச்சங்கள் (உடல எச்சங்கள்) அடையாளம் காணப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தற்போது அகழ்வுப் பணிகள் மதிய உணவிற்காக நிறுத்தப்பட்டுள்ளது.


முதலாம் இணைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் மத்தி பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளது பெண் போராளிகளது உடல எச்சங்களாக இருக்கலாம் என சந்தேகப்படும் மனித எச்சங்கள், உடைகள் மீட்கப்பட்ட பகுதியில் இன்றைய தினம் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி T.பிரதீபன் முன்னிலையில் முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவா உள்ளிட்டவர்களினால் இந்த அகழ்வுப் பணி முன்னெடுக்கப்படுகிறது. 

ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகப் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு மனித உரிமை சட்டத்தரணிகள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பொது அமைப்புகள் பொதுமக்கள் உள்ளிட்ட பலரது கண்காணிப்புகளுக்கு மத்தியில் இந்த அகழ்வுப் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. 

கடந்த 29.06.2023 அன்று மாலை முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மத்தி பகுதியில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பினை மேற்கொள்வதற்காக கனரக இயந்திரம் கொண்டு நிலத்தினை தோண்டியபோது நிலத்தில் புதைக்கப்பட்ட நிலையில் மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தினை தொடர்ந்து கொக்கிளாய் காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.

இது தொடர்பாக 30.06.2023 நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா குறித்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார். 

இதன்போது குறித்த மனித எச்சங்கள் காணப்படுகின்ற பகுதியில் யூலை 6 திகதி (இன்று) அகழ்வுப் பணிக்கு நீதிபதி உத்தரவிட்டதோடு, அதற்குரிய நபர்களுக்கான உரிய அறிவுறுத்தல்களை வழங்குமாறும் அதுவரை எச்சங்ளை அழிவடையாமால் பாதுகாக்குமாறும் கொக்கிளாய் காவல்துறையினருக்கு பணிப்பு விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.