விளக்கமறியலில் உள்ள தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான விசேட குழு ஒன்றை நியமிக்கும் பிரேரணை எதிர்வரும் 8 ஆம் திகதி விவாதம் இன்றி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.
இன்றைய தினம் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
தவறான நடத்தை, ஊழல், பதவி துஷ்பிரயோகம், கடமை தவறுதல் மற்றும் பாரபட்சம் ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 115 பேரின் கையொப்பத்துடன் அண்மையில் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த பிரேரணை இந்த மாதம் 8 ஆம் அல்லது 9 ஆம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ முன்னதாக அறிவித்திருந்தார்.
இதனிடையே, 2002 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க அதிகாரிகளை பதவி நீக்குதல் சட்டத்தின் பிரிவு 5 இன் படி விசாரணைக் குழு நியமிக்கப்பட வேண்டும் என சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கு அமைவாகவே தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதயிவில் இருந்து நீக்கம் செய்வதற்கான விசேட குழுவை நியமிக்கும் பிரேரணை எதிர்வரும் 8 ஆம் திகதி விவாதம் இன்றி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.