குடும்பத் தகராறு தொடர்பில் திம்புள்ள - பத்தன காவல் நிலையத்துக்கு முறைப்பாடு செய்ய வந்த தாயொருவர், காவல் நிலையத்துக்கு அருகிலுள்ள டெவோன் நீர்வீழ்ச்சியில் குதித்து உயிரிழந்துள்ளார்.
இவரின் சடலம் நேற்று மாலை (22) காவல்துறையினர் மற்றும் பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டுள்ளது
திம்புள்ள - பத்தன காவல்துறை பிரிவுக்குட்பட்ட போகாவத்தை பகுதியில் வசிக்கும் லெட்சுமனன் நிஷாந்தினி (வயது - 34) என்ற நான்கு பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு நீர்வீழ்ச்சியில் பாய்ந்து உயிரிழந்துள்ளார்.
குடும்பத் தகராறு தொடர்பில் முறையிடுவதற்கு இரு பிள்ளைகள் சகிதம் இவர் காவல் நிலையத்துக்கு வந்துள்ளார்.
முறைப்பாடு செய்ததையடுத்து ஒரு பிள்ளை சகிதம் நீர்வீழ்ச்சிக்கு அருகில் சென்றுள்ளார். அதன்பின்னர் குடிப்பதற்கு நீர் எடுத்துவருமாறு அந்த பிள்ளையிடம் கூறியுள்ளார்.
பிள்ளை அங்கிருந்து சென்ற பின்னர் நீர்வீழ்ச்சியில் குதித்துள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக கொட்டகலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை திம்புள்ள – பத்தனை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.