நாட்டை உலுக்கிய தாய், குழந்தை; படுகொலை - அதிகாலை கைதான முன்னாள் இராணுவவீரர், பலமுறை தன்னைத் தானே கத்தியால் குத்திக்கொண்டதாக தகவல்

ஹொரனை, அகுருவாதோட்டையில் இளம் தாய் மற்றும் அவரது 11 மாதப் பெண் குழந்தை ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர் கொலையுண்ட பெண்ணின் கணவரின் மைத்துனர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் வரகாகொட சல்காஸ் மாவத்தை பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டுக்கு வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இன்று காலை திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டு அரைக் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் சந்தேக நபரைப் பொலிஸார் கைது செய்ய முயற்சித்தபோது கூரான ஆயுதத்தால் பொலிஸ் பொறுப்பதிகாரியை பல தடவைகள் தாக்க முயற்சித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அவரது முயற்சி தோல்வியடைந்தமையால் அவர் தனது மார்பில் பல தடவைகள் கத்தியால் குத்திக் காயமேற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹொரணை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அகுருவாதோட்டை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

24 வயதான வாசனா குமாரி மற்றும் அவரது 11 மாத மகள் தஷ்மி திலன்யா இரண்டு நாட்களுக்கு முன்பு காணாமல் போயிருந்தனர்.

கணவர் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த நிலையில் வீட்டில் மனைவி மற்றும் குழந்தையை காணவில்லையெனத் தெரிவித்து கணவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

இதனையடுத்து தேடுதல்வேட்டையில் இறங்கிய பொலிஸார் குறித்த இருவரது சடலங்களையும் காட்டுப்பகுதியிலிருந்து நேற்றையதினம்(21) கண்டெடுத்தனர். கொலை செய்யப்பட்ட பெண் பயன்படுத்திய முகம் துடைக்கும் துணியும் அவரது உடலில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலைச் சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள கணவரின் மைத்துனர் முன்னாள் இராணுவ வீரர் என்பதும் குறிப்பிடத்தக்குது.