உக்ரைன் முழுவதும் குண்டுமழை

உக்ரைன் முழுவதும் ரஷ்யா கடுமையான வான் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

க்ரைய்மியா பிராந்தியத்தை ரஷ்யாவுடன் இணைக்கும் பாலம் மீதான தாக்குதலை தொடர்ந்து ரஷ்யா இந்த வான் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்ட உக்ரைனின் கிரைய்மியா பிராந்தியத்தையும் ரஷ்யாவையும் இணைக்கும் பாலம் மீது உக்ரைன் தாக்குதல்களை நடத்தியதில் தம்பதியினர் இருவர் மற்றும் அவர்களது பிள்ளை என மூவர் உயிரிழந்திருந்தனர்.

இதனையடுத்து உக்ரைனில் உற்பத்தி செய்யப்படும் தானியங்களை கருங்கடல் ஊடாக பாதுகாப்பாக கொண்டு செல்லும் வகையில் எட்டப்பட்ட உடன்டிக்கையில் இருந்து வெளியேறுவதாக ரஷ்யா அறிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து உக்ரைனின் தெற்கு மற்றும் கிழக்கு உட்பட பகுதிகளில் ஆளில்லா விமானங்கள் மற்றும் பெலஸ்ரிக் ரக ஏவுகணைகள் மூலம் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்பகுதி துறைமுகமான ஒடேசா மற்றும் மைகோலைவ், டொனெட்ஸ்க், கெர்சன், ஷப்போறிஸ்ஷியா மற்றும் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் ஆகிய பிராந்தியங்கள் ரஷ்யாவின் ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன.

பொல்ரோவா, செர்காசி, டினிப்ரோபெட்ரோவ்ஸ்க், கெர்கிவ் மற்றும் கிரோவோஹ்ராட் போன்ற பிராந்தியங்கள் மீது பெலஸ்ரிக் ரக ஏவுகணைகளை பயன்படுத்தி ரஷ்யா தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இதேவேளை, கிரைய்மியா பிராந்தியம் மீது ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்த மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அனுப்பிய 28 ஆளில்லா விமானங்கள் தாக்கி அழிக்கப்பட்டுள்ளதாகவும் ரஷ்யா கூறியுள்ளது.

இதேவேளை, உணவுக்கான அணுகலை பணயமாக வைத்து உலக நாடுகளை மிரட்டுவதற்கு ரஷ்யா முயற்சிப்பதாக உக்ரைன் அதிபர் வெலெடிமீர் ஷெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.

எந்தவொரு நாட்டினதும் உணவுப் பாதுகாப்பை அழிப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை எனவும் ரஷ்யாவின் மிரட்டல்களுக்கு அடிபணியப் போவதில்லை என்ற செய்தியை உலகம் வழங்க வேண்டும் எனவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.