கடந்த 500 நாட்களில் 9,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொலை – ஐ.நா.


 

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு தொடங்கியதில் இருந்து இதுவரை 500 குழந்தைகள் உட்பட 9,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த மோதல் 500 நாட்களை எட்டியுள்ள நிலையில் பொதுமக்களுக்கு ஏற்படும் இழப்பை வன்மையாக கண்டிப்பதாக ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது.

இதேவேளை உறுதிப்படுத்தப்பட்ட இறப்புகளின் எண்ணிக்கையை விட உண்மையான எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் என்றும் உக்ரைனில் உள்ள ஐநா மனித உரிமைகள் கண்காணிப்பு நிலையம் கூறியுள்ளது.

2022 ஆம் ஆண்டை விட இந்த ஆண்டு உக்ரைனில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சராசரியாக குறைவாக இருந்த போதிலும், மே மற்றும் ஜூன் மாதங்களில் இந்த எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை காலை இடம்பெற்ற ஏவுகணைத் தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டதோடு 37 பேர் காயமடைந்த நிலையில் இது படையெடுப்பு தொடங்கியதை அடுத்து பொதுமக்கள் மீது இடம்பெற்ற மிகப்பெரிய தாக்குதல் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.