நாளாந்தம் கால்களை இழக்கும் 10 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் : காசாவில் அரங்கேறும் துயரம்

காசா மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திவரும் தொடர் தாக்குதல் காரணமாக கடந்த ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதியில் இருந்து நாளாந்தம் 10 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தமது கால்களை இழந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து Save the Children அமைப்பின் அதிகாரியொருவர் கருத்துத் தெரிவிக்கையில் ”3 மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேல், காசாவின் மீது மனிதாபிமானமற்ற தாக்குதல்களை நடத்தி வருகின்றது. இத்தாக்குதல்களினால் ஏராளமான சிறுவர்கள் கொல்லப்படுவதும், ஊனமாக்கப்படுவதும் ஏற்றுக் கொள்ள முடியாதவொன்றாக உள்ளது.

இத்தாக்குதல் தொடங்கிய காலத்தில் இருந்து இதுவரையான காலப்பகுதியில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் ஒன்று அல்லது இரண்டு கால்களையும் இழந்துள்ளனர்”என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் சுமார் 50 % க்கும் அதிகமான சிறுவர்கள் வயிற்றுப் போக்கினால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், இதனால் சிறுவர்களின் உடல் நலத்துக்கு பாரிய அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் யுனிசெப் அமைப்பு கவலை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.