உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான மேலும் பல தகவல்கள் தற்போது தெரியவந்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் நேற்றைய ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து இதன்போது வினவப்பட்டது.
இதற்கு பதிலளித்த அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ,
சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வந்து, விவாதம் நடத்தப்படுமாயின் அது குறித்து மகிழ்ச்சியடைகின்றோம்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் முன்னோக்கிச் செல்கின்றன.
முன்னதாக தாக்குதல் தொடர்பில் பாராளுமன்றில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கும் மேலதிகமாக தற்போது பல தகவல்களை வெளிப்படுத்த முடியும்.
அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் அப்போதைய அரசாங்கத்தின் மூன்றாவது முக்கியஸ்தராக சஜித் பிரேமதாசவும், சிறிது காலம் பொலிஸ் திணைக்களத்திற்கு பொறுப்பான அமைச்சராக ரஞ்சித் மத்தும பண்டாரவும் இருந்தனர்.
மேலும் இந்த தாக்குதலின் பின்னணியில் இந்திய அரசு உள்ளதாக தாம் ஒருபோதும் கூறவில்லை, எனினும் அங்குள்ள சில பயங்கரவாத குழுக்கள் தாக்குதலின் பின்னணியில் இருந்திருக்க கூடும் என்றே குறிப்பிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.