இந்திய தூதுவருடனான சந்திப்பு திருப்தியாக அமைந்தது: வெடுக்குநாறி ஆலய நிர்வாகம்



இந்திய தூதுவருடனான சந்திப்பு திருப்தியாக அமைந்ததாகவும், விரைவில் தீர்வு கிடைக்க ஆவன செய்வார் என எதிர்பார்ப்பதாகவும் வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

கொழும்பிலுள்ள இந்திய தூதுவராலயத்தில் வெடுக்குநாறி ஆலய நிர்வாகத்தினர் உட்பட வவுனியாவை சேர்ந்த இந்து அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் கொழும்பு இந்துமாமன்ற பிரதிநிதிகள் உள்ளடங்கிய குழு இந்திய தூதுவரை நேற்று (10.04.2023) மாலை சந்தித்திருந்தது.

தொல்பொருள் திணைக்களம் ஏற்படுத்தும் தடைகள் 

சுமார் ஒரு மணி நேரம் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்கள் சேதமாக்கப்பட்டமை மீண்டும் விக்கிரகங்கள் வைப்பதற்கு தொல்பொருள் திணைக்களம் ஏற்படுத்தும் தடைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

எல்லையோர கிராமங்களில் நடைபெறும் ஆக்கிரமிப்புக்களுடன் சைவ அடையாளங்கள் அழிக்கப்படுகின்றமை தொடர்பாகவும் இதன்போது இந்திய தூதுவருக்கு ஆவணங்கள் ஊடாக தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தம்மால் முடிந்த செயற்பாடுகளை மேற்கொள்ள முயற்சிப்பதாக இந்திய தூதுவர் குறித்த குழுவிடம் தெரிவித்ததாக வெடுக்குநாறி ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

அதனால் இந்த சந்திப்பு திருப்தி தருவதாக அமைந்தது என ஆலய நிர்வாகத்தினர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.