நெதன்யாகு அரசுக்கு எதிராக இஸ்ரேலில் பாரிய ஆர்ப்பாட்டம் : வைத்தியசாலையில் நெதன்யாகு


 

காசா போர் தொடர்பில் இஸ்ரேலுக்குள் பெரும் அழுத்தத்தை எதிர்கொண்டிருக்கும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, நேற்று முன்தினம் (31) குடலிறக்க நோய்க்காக அறுவைச்சிகிச்சை செய்துகொண்டார். தற்போது அவரது நிலை சீராக இருப்பதாய் ஜெருசலத்தில் உள்ள மருத்துவமனை தெரிவித்தது.

அவர் சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கும் இடைப்பட்ட காலத்தில் துணைப் பிரதமர் யாரிவ் லெனின் தற்காலிகப் பிரதமராகப் பணியாற்றுவார் என்று பிரதமர் அலுவலகம் கூறியது.

இந்நிலையில் ஜெரூசலத்தில் உள்ள இஸ்ரேலிய பாராளுமன்றக் கட்டடத்திற்கு வெளியில் ஆயிரக்கணக்கான அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று திரண்டனர். காசாவில் போர் வெடித்தது தொடக்கம் இஸ்ரேலில் இடம்பெற்ற பாரிய ஆர்ப்பாட்டமாக ஞாயிறு இரவு இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டம் அமைந்தது.

ஹமாஸின் பிடியில் இருந்து பணயக்கைதிகளை விடுவிக்கும் வகையில் போர் நிறுத்த உடன்படிக்கை ஒன்றை எட்ட வேண்டும் என்றும் முன்கூட்டியே தேர்தலை நடத்த வேண்டும் என்றும் இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அழைப்பு விடுத்தனர்.


காசா போர் வெடிப்பதற்கு காரணமான 1,139 இஸ்ரேலியர் கொல்லப்பட்ட ஒக்டோபர் 7 ஆம் திகதிய பலஸ்தீன போராளிகளின் தாக்குதலில் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தவறியது, காசாவில் தொடர்ந்து பிடித்து வைக்கப்பட்டிருக்கும் 100க்கும் அதிகமான பணயக்கைதிகளை விடுவிக்கத் தவறியது தொடர்பில் நெதன்யாகு அரசு இஸ்ரேலுக்குள் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டுள்ளது.

கடந்த நவம்பரில் ஒரு வாரம் நீடித்த போர் நிறுத்தத்தின் போது 100க்கும் அதிகமான பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்ட நிலையில் புதிய சுற்று போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை எகிப்து தலைநகர் கெய்ரோவில் கடந்த ஞாயிறன்று ஆரம்பமானது.

முன்னதாக முஸ்லிம்களின் புனித ரமழானுக்கு முன்னர் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கு மத்தியஸ்தர்கள் முயன்றபோதும் ரமழானின் பாதிக்கும் அதிகமான நாட்கள் நிறைவடைந்திருக்கும் நிலையில் உடன்பாடு ஒன்றை எட்டுவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

இஸ்ரேலிய பாராளுமன்றத்தை முடக்கிய ஆர்ப்பட்டக்காரர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக உறுதி பூண்டுள்ளனர்.

காசா போர் பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்திருக்கும் சூழலில் இஸ்ரேலின் செங்கடல் துறைமுக நகரான ஈலாட்டில் நேற்று வான் தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு குழு ஒன்று பொறுப்பேற்றுள்ளது.


இஸ்ரேலின் கிழக்கில் இருந்து அனுப்பப்பட்ட பறக்கும் பொருள் ஒன்று ஈலாட்டில் இருக்கும் கட்டடம் ஒன்றை தாக்கியதாக இஸ்ரேல் இராணுவம் கூறியது. அப்போது அந்த நகரில் சைரன் அபாய ஒலியும் எழுப்பப்பட்டது.

ஈராக்கில் உள்ள இஸ்லாமிய எதிர்ப்பு அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில், தகுந்த ஆயுதத்தை பயன்படுத்தி இஸ்ரேலின் முக்கிய இலக்கு மீது தாக்கதல் நடத்தியதாக குறிப்பிட்டது. இந்த நகர் மீது ஏற்கனவே யெமன் ஹ_த்தி கிளர்ச்சியாளர்கள் மற்றும் சிரியாவில் உள்ள குழு ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேநேரம் சிரிய தலைநகர் டமஸ்கஸின் புறநகரில் நேற்று முன்தினம் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக சிரிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.

இந்நிலையில் ஹமாஸ் தலைவர் இஸ்மைல் ஹனியேவின் 57 வயது சகோதரி சபா அப்தல் சலாம் ஹனியேவை தெற்கு இஸ்ரேலில் வைத்து கைது செய்ததாக இஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். டெல் ஷெவாவில் இருக்கும் தனது வீட்டில் வைத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.