காணி, பொலிஸ் அதிகாரங்கள் குறித்து சஜித்த கூறவே இல்லை என்கிறார் மரிக்கார்


 

  
 வடக்குக்கு ஒரு சட்டமும் தெற்குக்கு ஒரு சட்டமும் இருக்க முடியாது எனவும் மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்படவேண்டும் என சஜித் பிரேமதாச கூறவில்லை எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற  உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று(11)  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர்,

அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் போது சமூக மற்றும் சுற்றாடல் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதில் எவ்வித சிக்கலும் இல்லை.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும் அதனையே குறிப்பிட்டிருந்தார். மாறாக பொலிஸ் அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்படவேண்டும் என அவர் கூறவில்லை.

வடக்குக்கு ஒரு சட்டமும் தெற்குக்கு ஒரு சட்டமும் இருக்க முடியாது. முழு நாட்டுக்கும் ஒரே சட்டம் என்ற ரீதியில் தமிழ் மக்களுக்கான நியாயத்தை வழங்கவேண்டும் என்று தான் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டிருந்தார்.

வடக்கு மக்களுக்கும்  இலங்கை பிரஜைகள் என்ற ரீதியில் ஏனைய மக்கள் அனுபவிக்கும் சகல வசதிகளையும் அனுபவிப்பதற்கான உரிமை உள்ளது.

ஆனால் அவற்றை எமது நாட்டு அரசாங்கங்கள் வழங்கவில்லை. ஐ.தே.க அரசாங்கமோ, பொதுஜன பெரமுன அரசாங்கமோ அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

எனவே தான் அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அவற்றை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்

இதேநேரம் யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்,  13 ஆவது திருத்தச் சட்டத்தினை நடைமுறைபடுத்துவோம். நாட்டிலுள்ள சட்டத்தினை நடைமுறைபடுத்துவது இவ்வளவு பிரச்சினையாக இருந்தால் அதனை நிச்சயமாக நாம் அதனை செய்வோம். காணி பொலிஸ் அதிகாரத்தையும் நடைமுறைபடுத்துவோம் என பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரட்ன தெரிவித்தமை குறிப்பிடத்டதக்கது.