யாழில் கொடூரம்..! கணவரால் இளம் தாயொருவர் கொலை

யாழ்ப்பாணம் - நாவற்குழி பகுதியில் மனைவியைக் கொலை செய்து விட்டு தப்பிச் செல்ல முற்பட்ட கணவன் காவல்துறை புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டார்.

யாழ்ப்பாண பிராந்திய சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

நாவற்குழி ஐயனார் கோயிலடியில் வசிக்கும் 23 வயதான அஜந்தன் யமுனா என்ற  இரண்டு பிள்ளைகளின் தாய் கொலை செய்யப்பட்ட நிலையில்  இன்று (16) காலை சடலமாக மீட்கப்பட்டார்.

 இந்நிலையில் வீட்டில் கணவனைக் காணாத நிலையில் காவல்துறையினர் சந்தேகம் அடைந்து  குடும்பத் தகராறில் கணவரால் குறித்த பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கருதி கணவரை  தீவிரமாக  தேடினர்.

இதேவேளை யாழ்ப்பாணம் கச்சேரிக்கு அண்மையில் முச்சக்கரவண்டியில் சந்தேகநபர் தப்பிக்க முற்பட்ட வேளையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரை யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்ட நிலையில் "தான் மனைவியை தாக்கியதாகவும் உயிரிழந்தது தனக்கு தெரியாது" என சந்தேக நபர் தெரிவித்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

 கைது செய்யப்பட்ட  சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக சாவகச்சேரி காவல்துறையினரிடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.