ரஜினிகாந்தின் 170வது படத்தின் முக்கிய அப்டேட்!

ஜெயிலர் படம் முடியும் முன்னரே ரஜினிகாந்தின் அடுத்த திரைப்படத்தை இயக்கப்போவது யார் என்பது குறித்த பேச்சு சினிமா வட்டாரங்களில் எழுந்துள்ளது.சூப்பட் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ’ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் ரஜினியுடன் வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மிகப்பெரிய ஜெயில் செட் போடப்பட்டு அதில் நடைபெற்று வருகிறது. ’ஜெயிலர்’ படம் முடியும் முன்னரே ரஜினிகாந்த்தின் அடுத்த திரைப்படத்தை இயக்கப்போவது யார் என்பது குறித்த பேச்சு சினிமா வட்டாரங்களில் எழுந்துள்ளது. சமீப வருடங்களாக இளம் இயக்குநர்களிடம் இணைந்து பயணிக்க விரும்பும் ரஜினிகாந்தின் 170வது படத்தை இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கவுள்ளதாகவும் இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் அரவிந்சாமி நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.சிவகார்த்திகேயன் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற டான் திரைப்படத்தின் இயக்குநர் தான் சிபி சக்கரவர்த்தி. மேலும் இப்படத்தைப் பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா தயாரிக்க வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் உலா வருகின்றன. இதற்கெல்லாம் பதிலளிக்கும் வகையில் நாளை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடக்கவுள்ள பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் இதற்கான அறிவிப்பை வெளிவிடுவார்கள் எனக் கூறப்படுகிறது.இவ்விழாவில் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்த இசை வெளியீட்டு விழா மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.