திமுக எம் எல் ஏ குடும்பத்தின் அராஜகம்:வீட்டுப் பணிப்பெண் மீது கொடூர தாக்குதல்

வீட்டு பணிப்பெண்ணை தீயினால் சுட்டும், தலை முடியை வெட்டியும் கொடுமைப்படுத்திய காணொளியொன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த ரேகா என்ற பெண் 12-ம் வகுப்பு படித்து முடித்து விட்டு மேலதிக படிப்பிற்காக வசதி இல்லாமல் தாயை போலவே வீட்டு வேலை செய்ய சென்றுள்ளார்.

சென்னை பல்லாவரத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் ஆன்டோ மதிவாணன் என்பவர் வீட்டிலேயே வேலைக்கு சேர்ந்துள்ளார்.

சென்னை திருவான்மியூரில் மனைவி மார்லினா, மற்றும் குழந்தையுடன் ஆண்டோ வசித்து வருகிறார்.

கடந்தாண்டு மே மாதம் 16 ஆயிரம் ரூபாய் மாத சம்பளத்திற்கு வேலைக்கு சேர்ந்த பெண்ணுக்கு 5 ஆயிரம் ரூபாய் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், தீயினால் சுட்டும், தலை முடியை வெட்டியும் மார்லினா கொடுமைப்படுத்தியுள்ளார்.

இதை தவிர பல கொடுமைகளை செய்த அவர் தான் நலமாக இருப்பதாக வெளியில் கூற வேண்டும் என்றும் மிரட்டியுள்ளார்.

பொங்கல் பண்டிகைக்காக வீட்டிற்கு வந்த ரேகா தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து தனது அம்மாவிடம் சொல்லி அழுத நிலையில் இந்த விடயம் வெளியில் தெரிய வந்துள்ளது.

மேலும், உடலில் அடிப்பட்ட மற்றும் தீயினால் சுட்ட காயங்கள் இருந்ததால் அவரை உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்தை வழக்கு பதிவு செய்ய உளுந்தூர்பேட்டை காவல்துறையினர் மறுத்த நிலையில் நீலாங்கரை மகளிர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

திருவான்மியூரில் உள்ள ஆன்டோவின் வீட்டிற்கு ஊடகவியலாளர்கள் சென்ற போது வீட்டில் யாரும் இல்லை என காவலாளி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.