வெடுக்குநாறி மலையில் மகாசிவராத்திரி - ஆலய நிர்வாகத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

வவுனியா -  வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விடயத்தில் நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய கட்டளையின்படி செயற்படுமாறு ஆலய நிர்வாகத்திற்கு வவுனியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நேற்றைய தினம் (4) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 8ஆம் திகதி மகாசிவராத்திரி தினத்தை முன்னிட்டு வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதற்கு ஆலய நிர்வாகத்தினர் முயற்சிகளை எடுத்திருந்தனர்.

எனினும், மின்பிறப்பாக்கி இயந்திரங்களை பயன்படுத்தி நிகழ்வுகளை நடத்த முற்பட்டால் அதற்கு நீதிமன்றில் அனுமதி பெறப்படவேண்டும் என நெடுங்கேணி காவல்துறையினரால் ஆலய நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து வவுனியா நீதிமன்றில் ஆலய நிர்வாகம் சார்பில் கடந்த வாரம் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அது தொடர்பான விசாரணைகள் நேற்றையதினம் தினம் (04)மன்றில் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது விடயங்களை ஆராய்ந்த நீதவான் வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலயத்தில் ஏற்கனவே வழங்கப்பட்ட கட்டளையின் பிரகாரம் செயற்படுவதற்கு கட்டளை வழங்கப்பட்டது.

இதேவேளை, வெடுக்குநாறிமலை ஆலயத்தில் பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதற்கு வவுனியா நீதிமன்றம் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் உத்தரவு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் வவுனியா வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் எதிர்வரும் சிவராத்திரி தினத்தில் முன்னெடுக்கப்படவுள்ள வழிபாட்டை குழப்புவதற்கு பௌத்த பீடம் ஒன்றின் பிக்குமார்களால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் தவபாலன் குற்றம் சுமத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.