துவாரகாவாக தோன்றிய பெண்ணின் பின்னணியில் செயற்பட்ட மூன்று தரப்பினரை சவாலுக்குட்படுத்தும் மூத்த ஊடகவியலாளர்

தமிழீழ விடுதலைப்புலிகளின் இயக்க தலைவர் வே.பிரபாகரனின் மகள் துவாரகா சுவிட்சர்லாந்தில் இருக்கிறார் என்ற செய்தியை சிலர் பரப்பிய போதே அதன் நம்பகத்தன்மை பற்றி பலராலும் கேள்வி எழுப்பபட்டது, அதன் ஒரு கட்டமாகவே துவாரகா என்ற நாடகம் மாவீரர் தினத்தன்று அரங்கேற்றப்பட்டதாக மூத்த ஊடகவியலாளர் இரா.துரைரத்தினம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இது ஒரு கேலி கூத்து என்பதை பெரும்பாலான தமிழ் மக்கள் உணர்ந்து கொண்டனர். துவாரகா என கூறிக் கொண்டு அப்பெண் வாசித்த அறிக்கை கூட ஒரு கேலிக்கூத்தாகவே இருந்தது. இந்திய சொல்லாடல்களே அந்த அறிக்கையில் காணப்பட்டன.

மாநிலம் என்ற சொல்லாடல் இலங்கையில் பாவிப்பதில்லை. அது இந்திய சொல் வழக்கு. தனது தந்தையின் பெயரை கூட உச்சரிக்க தெரியாத பெண்ணாகவா துவாரகா வளர்ந்தார்.

இந்த நாடகத்தின் பின்னணியில் மூன்று தரப்புக்கள் செயற்பட்டதை அவதானிக்க முடிகிறது. மாவீரர் தினத்தில் துவாரகா உரையாற்றுவார் என்பதை இந்த மூன்று தரப்பும் தெரிவித்து வந்தன.

இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவால் புனர்வாழ்வு என்ற பெயரில் பயிற்சி வழங்கப்பட்டு நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்ட புனர்வாழ்வு அளிக்கப்பட்ட போராளிகள்.

இலங்கை புலனாய்வு பிரிவினரின் நெறிப்படுத்தலில் இவர்கள் ஒரு அரசியல் கட்சியாகவும் இப்போது செயற்பட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ளவர்களின் சிலரின் கருத்துக்கள், இவர்கள் இந்திய றோவின் நெறிப்படுத்தலில் செயல்படுபவர்கள். சுவிஸ், பிரான்ஸ் போன்ற நாடுகளில் விடுதலைப்புலிகளின் சொத்துக்களை பதுக்கி வைத்துக் கொண்டு மீண்டும் போராட்டம் வெடிக்கும் என மக்களிடம் உண்டியல் குலுக்குபவர்கள். மீண்டும் ஆயுதப் போராட்டம் ஆரம்பமாக போவதாகவும், விடுதலைப் புலிகள் மீள் எழுச்சி பெற்றிருக்கிறார்கள் என காட்ட வேண்டிய தேவையும் இந்த மூன்று தரப்புக்கும் உள்ளது.

மக்களை யுத்தகால நெருக்கடிக்குள் வைத்திருப்பதற்கும் வகை தொகை இன்றி தமிழ் மக்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைப்பதற்கும் இதன் மூலமே முடியும்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம், ஐ.நா.மனித உரிமை பேரவை, சர்வதேச நாணய நிதியம் ஆகியன இலங்கை அரசாங்கத்தை கோரி வருகின்றன. இலங்கைக்கு கடன் உதவியை வழங்கியிருக்கும் சர்வதேச நாணய நிதியம் 15 நிபந்தனைகளை விதித்திருந்தது.

இதில் முக்கியமான நிபந்தனை பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என்பதாகும். மீண்டும் போராட்டத்திற்கு துவாரகா தலைமை தாங்குவார் என்ற காசி ஆனந்தனின் கூற்று ஒன்றே போதும் இலங்கை அரசு பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்காமல் இருப்பதற்கு.

மீண்டும் ஆயுதப்போராட்டம் தொடங்கலாம் எனவே பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க முடியாது என சர்வதேச நாணய நிதியத்திற்கு இலங்கை அரசு சொல்லி மிக இலகுவாக தப்பித்துக்கொள்ளும்.

அதற்காகவே இலங்கை புலனாய்வு பிரிவு புனர்வாழ்வு அளிக்கப்பட்ட போராளிகள் கட்சியினர் ஊடாக துவாரகா என்ற நாடகத்தை நடத்தி முடித்திருக்கின்றனர். இலங்கையில் குறிப்பாக வடக்கு கிழக்கில் குழப்பமான சூழல் நிலவவேண்டும் என்பதே இந்திய றோவின் நோக்கமாகும்.

சுவிஸ், பிரான்ஸ், லண்டன் உட்பட மேற்குலக நாடுகளில் விடுதலைப்புலிகளின் சொத்துக்களை முடக்கி வைத்திருப்பவர்களுக்கும் விடுதலைப்புலிகளின் பெயரை சொல்லி பணம் சேர்ப்பவர்களுக்கும் துவாரகாவின் மீள் வருகை தேவைப்படுகிறது.

மீண்டும் யுத்தம் ஏற்பட வேண்டும், அதன் மூலம் தமது உண்டியல் நிரம்பும் என அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இலங்கையில் மீண்டும் யுத்தம் தொடங்கி மேற்குலக நாடுகளில் உண்டியல் நிரம்பினால் தமது கைகளுக்கும் ஏதாவது கிடைக்கும் என தமிழகத்தில் உள்ள சிலரும் நம்புகின்றனர்.

இந்த மூன்று தரப்பின் கூட்டுத்தயாரிப்பே துவாரகா என்ற நாடகமாகும். துவாரகாவின் மாவீரர் தின உரை என கூறிக்கொண்டு அவுஸ்திரேலியாவில் இருக்கும் தமிழ் ஊடகம் ஒன்றே ஒலிபரப்பு செய்தது.

லண்டன், சுவிஸ், பிரான்ஸ் உட்பட மேற்குலக நாடுகளில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வில் இந்த உரை ஒலிபரப்பபடவில்லை. மேற்குலக நாடுகளில் மாவீரர் நாளை ஏற்பாடு செய்யும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவும் துவாரகா என்ற நாடகத்தை கணக்கில் எடுக்கவில்லை.

சுவிஸில் மாவீரர் நாளை ஏற்பாடு செய்தவர்களில் ஒருவரிடம் இந்த உரை பற்றி கேட்ட போது அதன் உண்மை பொய் நமக்கு தெரியாது என சொல்லி இருந்தார்.

இந்த நாடகத்திற்கு பெரும் வரவேற்பு கிடைக்கும் என்றே இதனை ஏற்பாடு செய்தவர்கள் நம்பினர். ஆனால் அதற்கு எதிர்மறையாக பலத்த எதிர்ப்பே மக்களிடமிருந்து வெளிப்பட்டிருக்கிறது. ஒப்பற்ற தியாகத்தை செய்த குடும்பத்தை இழிவுபடுத்தி விட்டார்களே என்ற கோபக்கனல் மக்களிடமிருந்து வெளிப்பட்டிருக்கிறது.

துவாரகாவாக நடித்த பெண் யார் என்பதையும் மக்கள் அம்பலப்படுத்தியிருக்கிறார்கள். இவ்வாறான இழி செயலை பித்தலாட்டத்தை இனிமேல் யாரும் செய்ய துணியாத அளவிற்கு அப்பெண்ணை நார் நாராக உரித்து தொங்க விட்டிருக்கிறார்கள்.

இந்த பித்தலாட்டம் பற்றி மக்களின் கோபம் வெளிப்பட்டிருக்கும் இவ்வேளையில் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் பதில் கூற வேண்டியவர்கள் மௌனமாக இருப்பதேன் என்ற கேள்வி எழுகிறது.

மேற்குலக நாடுகளில் மூன்று அமைப்புக்கள் செயற்பட்டு வருகின்றன. தாமே ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகள் என்றும் கூறி வருகின்றனர்.

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், உலக தமிழர் வரலாற்று மையம் என்ற இந்த மூன்று அமைப்புக்களும் இது பற்றி மௌனம் காத்து வருகின்றன. இது பற்றி மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு இவர்களுக்கு உண்டு. அதனை செய்வார்களா? என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.