முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் ஆரம்பமானது சிரமதானப் பணி

 தமிழ் மக்களுக்கான உரிமைப் போரில் தமது உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாள் இவ்வாண்டும் கார்த்திகை 27ஆம் திகதி தமிழ்மக்களால் அனுஸ்டிக்கப்படவுள்ளது.

வருடம்தோறும் கார்த்திகை 27 மாவீரர் நாள் நிகழ்வுகள் தமிழர்கள் வாழும் தேசமெங்கும் அனுஸ்டிக்கப்படுவது வழமை.

இவ்வாண்டும் மாவீரர் நாள் நிகழ்வுகள் மேற்கொள்ள தமிழர் தாயகப் பகுதிகள் மாத்திரமின்றி தமிழ் மக்கள் வாழும் தேசமெங்கும் தயாராகி வருகின்ற நிலையில்  முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களும் தயாராக ஆரம்பித்துள்ளன.ஜ

இதற்கமைய முல்லைத்தீவு மாவட்டத்தில் இலங்கை இராணுவத்தின் 592 ஆவது படைப்பிரிவினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இவ்வாண்டுக்கான மாவீரர் நாள் நிகழ்வுகள் செய்வதற்கான சிரமதானப் பணிகள் முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவினரால் இன்று (04) ஆரம்பிக்கப்பட்டது.

முன்னதாக மாவீரர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தி மலரஞ்சலி இடம்பெற்றதைத் தொடர்ந்து சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இவ்வாண்டும் கார்த்திகை 27 மாவீரர் நாள் உணர்வு பூர்வமாக இடம்பெறும் எனவும் அனைத்து மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவுகளையும் கலந்துகொள்ளுமாறும் முன்னாயத்த பணிகளிலும் ஒத்துழைப்பு வழங்குமாறும் பணிக்குழுவினர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.

அத்தோடு மாவீரர் நாளினை நினைவு கூருவதற்கான உரிய இடவசதி இல்லாமல் தாம் துன்பப்படுவதாகவும், உடனடியாக குறித்த காணியை விடுவித்து உதவுமாறும் உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.