உள்ளூராட்சித் தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு!

2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.முன்னதாக, கடந்த ஜனவரி 30 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில், மார்ச் 09 ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.எவ்வாறாயினும், நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தேர்தலுக்கு நிதியளிக்க முடியாது என்று அரசாங்கம் வலியுறுத்தியதால், தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

மீண்டும் மீண்டும் உள்ளூராட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட பின்னர், இறுதியில் ஏப்ரல் 25 ஆம் திகதிக்கு மாற்றப்பட்டது.இருப்பினும், திட்டமிடப்பட்ட திகதிக்கு ஒரு மாதத்திற்கும் குறைவான காலமே இருப்பதால், இந்த முறையும் வாக்குப்பதிவு தாமதமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணப்பற்றாக்குறை காரணமாக வாக்குச் சீட்டு அச்சடிக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், தேர்தல் ஒத்திவைக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.எனினும், தேர்தல் ஒத்திவைக்கப்படுவது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு இதுவரை எந்த உத்தியோகப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இதேவேளை, 2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் தபால் மூல வாக்களிப்பு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு முன்னர் குறிப்பிட்டிருந்தது.