விரைவில் சட்ட நடவடிக்கை: வசந்த கரன்னாகொட அறிவிப்பு


தன் மீதான அமெரிக்கத் தடைக்கு எதிராக விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கடற்படைத் தளபதி அட்மிரல் ஒவ் த பிளீட் வசந்த கரன்னாகொட தெரிவித்துள்ளார்.

வசந்த கரன்னகொட கடற்படைத் தளபதியாக இருந்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அமெரிக்காவுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிவித்திருந்தது.

இது தொடர்பில் நேற்றைய தினம் (02.05.2023) இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்குக்கு, வசந்த கரன்னாகொட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "கடந்த 27ஆம் திகதி வடமேற்கு மாகாண ஆளுநரும் கடற்படையின் முன்னாள் தளபதியுமான எனக்கும் மற்றும் எனது மனைவி அசோகா கரன்னாகொடவுக்கும் அமெரிக்காவுக்குள் நுழையத் தடை விதிக்கப்படுவதாக இராஜாங்கச் செயலாளர் அறிவித்துள்ளார்.

உரிய நடவடிக்கையின் மூலம் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகச் சட்ட ரீதியாகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள போதிலும், குற்றச்சாட்டுகள் தொடர்பில் அமெரிக்க இராஜாங்கச் செயலர் எனக்கு அறிவிக்கவில்லை.

எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் அமெரிக்காவுக்குள் பிரவேசிக்க விதிக்கப்பட்ட தடை நியாயமற்றது. கடந்த 14 ஆண்டுகளாக நானோ, எனது குடும்பத்தினரோ அமெரிக்காவுக்கான விசா விண்ணப்பத்தைக் கோரவும் இல்லை.

ஆகவே, திடீரென எம் மீது தடை அறிவிப்பு விடுக்கப்பட்டமையால் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.