முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட உள்ளதாகவும், 14 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட உள்ளதாகவும் பதிவிட்ட யூடியூபர் சுதந்த திலகசிறிக்கு எதிராக சட்டத்தரணிகள் முறைப்பாட்டை செய்துள்ளனர்.
இந்த பதிவின் அடிப்படையில், ரணிலின் கைது குறித்து முன்கூட்டியே திட்டமிடப்பட்டதா என்பது குறித்து சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக சட்டத்தரணி நளின் பத்திரன தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தின் முடிவை இந்த யூடியூபர் எவ்வாறு முன்கூட்டியே அறிந்து கொண்டார் என்பது தொடர்பில் தாம் ஆச்சரியப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்ற உறுப்பினர்கள் சாமர சம்பத் தசநாயக்க மற்றும் ரவூப் ஹக்கீம் உள்ளிட்டவர்களும் இதே சந்தேகத்தை எழுப்பியுள்ளனர்.
அத்துடன் குறித்த யூடியூபர், அண்மையில் இடம்பெற்ற பொது நிகழ்வில் பிரதமர் ஹரிணி அமரசூரிய மீது தேவையற்ற பாசத்தை வெளிக்காட்டியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பிரதமர் போன்ற ஒரு ஆளுமைக்கு பொதுவில் எப்படி ஒருவர் இவ்வளவு பாசத்தைக் காட்ட முடியும் என்று ரவூப் ஹக்கீம் கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்படுவதற்கு முன்னதாக கடந்த வியாழக்கிழமை யூடியூப் தளத்தில் காணொளியொன்றைப் பதிவேற்றிய சுதத்த திலகசிறி, வெள்ளிக்கிழமை ரணில் கைது செய்யப்படுவது உறுதி என்றும், அதன்பின் 14 நாட்கள் விளக்கமறியலுக்கு அனுப்பப்படுவார் என்றும் அடித்துக் கூறியிருந்தார்.
குறித்த கூற்றுக்கு எதிராகவே ஐக்கிய தேசியக் கட்சி நேற்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளது.
ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்படுவதற்கு முன்னரே அதுகுறித்து சுதத்த திலகசிறி எவ்வாறு அறிந்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்துமாறு ஐக்கிய தேசியக் கட்சி தனது முறைப்பாட்டில் கோரியுள்ளது.