வெனிசுவேலாவில் நிலச்சரிவு-பலி எண்ணிக்கை 36 ஆக உயர்வு!

வெனிசுவேலாவின் லாஸ் டெஜெரியாஸ் நகரில் நிலச்சரிவு காரணமாக வீடுகள் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36ஆக உயர்ந்துள்ளது. மேலும் 56 பேர் காணாமல் போயுள்ளனர்.சுமார் 1,000 அவசரகால பணியாளர்கள், தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து துணைத் ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் கூறுகையில், ‘நாங்கள் எங்களால் முடிந்தவரை காப்பாற்ற முயற்சிக்கிறோம், அன்புக்குரியவரை இழந்த அனைவருக்கும் எங்கள் இரங்கலைத் தெரிவிக்கிறோம்’ என கூறினார்.ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மூன்று நாட்கள் தேசிய துக்கத்தை அறிவித்துள்ளார்.உயிரிழந்தவர்களில் இரண்டு சிறு குழந்தைகளும் உள்ளடங்குவதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

25பேர் உயிரிழந்ததாக முந்தைய தகவல்கள் தெரிவிக்கின்றன, ஆனால் உட்துறை மற்றும் நீதி அமைச்சர் ரெமிஜியோ செபலோஸ் ஊடகங்களிடம் இந்த எண்ணிக்கை 36ஆக உயர்ந்துள்ளது என கூறினார். தொடர் மழையால் எல் பாடோ நதி கரைபுரண்டு ஓடியது. இதன் விளைவாக ஏற்பட்ட வெள்ளம், தலைநகர் கராகஸிலிருந்து தென்மேற்கே சுமார் 50 கிமீ தொலைவில் உள்ள நகரத்தில் உள்ள மரங்கள், கார்கள், வீடுகள் மற்றும் கடைகள் அடித்துச் செல்லப்பட்டன.