மாங்குளத்தில் இடம்பெற்ற கண்ணிவெடி விபத்து: நால்வர் படுகாயம்

முல்லைத்தீவு (Mullaitivu) பகுதியில் ஏற்பட்ட கண்ணிவெடி விபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தானது, நேற்று (05) முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தின் மாங்குளம் - துணுக்காய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த நான்கு பெண் பணியாளர்களே குறித்த விபத்தில் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

அந்தவகையில், காயமடைந்தவர்கள் 43 , 40 , 39 வயதுடையவர்கள் என்பதுடன் இவர்களில் மூவர் மாங்குளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்களுக்காக கிளிநொச்சி  மாவட்ட பொது வைத்தியசாலைக்கு (District General Hospital Kilinochchi) மாற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை துணுக்காய் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.