நாளை திட்டமிட்டபடி குருந்தூர் மலை பொங்கல் விழா - தடுக்கும் முயற்சிகள் தோல்வியில்


முல்லைத்தீவு குருந்தூர்மலையில் நாளை(18) இடம்பெறும் பொங்கல் விழாவிற்கு தடைவிதிக்க வேண்டும் என சிறிலங்கா காவல்துறையினர் முன்வைத்த விண்ணப்பத்தை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இந்தப் பொங்கல் வழிப்பாட்டை தடுக்க கல்கமுவ சாந்த போதி தேரருக்கோ அல்லது அருண் சித்தார்த்துகோ எந்தவிதமான அதிகாரமும் இல்லை எனவும் முல்லைத்தீவு நீதிமன்று கட்டளையாக்கியுள்ளது.

குருந்தூர் மலையில் நாளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொங்கல் இடம்பெற்றால் இரண்டு குழுவினருக்கிடையில் ஏற்படக் கூடிய கருத்து முரண்பாடு உணர்ச்சிகரமான விடயங்கள் என்பதால் அது மதக்கலவரமாக உருவாகி உயிர் ஆபத்து ஏற்படுத்தக்கூடும் என முல்லைத்தீவு காவல்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குருந்தூர்மலையின் அமைவிடத்தின் அடிப்படையில் அவ்வாறான ஒரு கலவரம் ஏற்படுமாயின், அதனை தடுப்பதற்கு மிகவும் கடினமாகும் எனத் தெரிவித்து குற்றவியல் நடைமுறை கோவை பிரிவு 106 (01)கீழ் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் அறிக்கை ஒன்றை நேற்று தாக்கல் செய்துள்ள முல்லைத்தீவு காவல்துறையினர், பொங்கல் வழிபாட்டுக்கு எதிராக தடை உத்தரவை கோரியுள்ளனர்.

இந்த வழக்கு இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, புராதன சின்னங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அந்த பிரதேச மக்கள் தங்களது மத ரீதியான பூஜை வழிபாடுகளை மேற்கொள்ளலாம் என தீர்ப்பளித்துள்ளார்.

ஒருவரது மத வழிபாடுகளுக்கு மற்றைய தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றார்கள் என்பதற்காக ஒருவரது மத வழிபாடுகளை தடுக்க தடை கட்டளை வழங்க முடியாது என கட்டளையிட்டு, காவல்துறையினரின் தடையுத்தரவு கோரிக்கையை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

அத்துடன் பொங்கல் வழிபாட்டை விகாராதிபதி சாந்தபோதி தேரரோ அல்லது அவருடன் வரும் குழுவினரோ அருண் சித்தார்த் என்பவரோ அல்லது அவருடன் வரும் குழுவினரோ தடுக்க எந்தவிதமான அதிகாரமும் இல்லை எனவும் நீதிமன்றம் கட்டளை வழங்கியுள்ளது.