குருந்தூர் மலை விவகாரம் - தொல்பொருள் திணைக்களம் வழங்கிய உறுதிமொழி

முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் பொங்கல் நிகழ்வுக்கு பாதகமாக நடக்க மாட்டோம் என தொல்பொருள் திணைக்களத்தினால் நீதிமன்றத்தில் உறுதியளிக்கப்பட்டது.

குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளையை மீறி அமைக்கப்பட்ட சட்டவிரோத விகாரை கட்டுமானம் தொடர்பில் இடம்பெறும் வழக்கு விசாரணையில் அண்மையில் இடம்பெற்ற பொங்கல் வழிபாடுகளுக்கு இடையூறு விளைவிக்கும் விதமான சம்பவம் தொடர்பாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரனால் முல்லைத்தீவு காவல்துறையில் முறைப்பாடு செய்த நிலையில் குறித்த விடயமாக இருந்த வழக்கு நகர்த்தல் பத்திரம் அணைத்து இடம்பெற்றுக்கொண்டிருந்த வழக்கு விசாரணை இன்றையதினம் (08) மீண்டும் விவிசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

வழக்கு விசாரணைகளின் பின்னர் சட்டத்தரணி தனஞ்சயன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது,

"குருந்தூர்மலை வழக்கானது முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றிலே விசாரணைக்காக எடுத்து கொள்ளப்பட்டது.

கடந்த தவணையிலே பொங்கல் உற்சவம் ஒன்றினை ஆதி ஐயனார் ஆலயத்திலே செய்ய முற்பட்ட வேளை தொல்லியல் திணைக்களத்தினாலும், சகோதர மொழி பேசுபவர்களாலும் தடுக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றது. அது தொடர்பாக நகர்த்தல் பத்திரம் ஊடாக அந்த விடயத்தை நீதிமன்றத்தின் கவனத்திற்கு நாங்கள் கொண்டுவந்தோம். 

அது தொடர்பாக பதிலளிப்பதற்காக தொல்லியல் திணைக்களத்திற்கு தவணை வழங்கப்பட்டிருந்தது.

இன்றையதினம் தொல்லியல் திணைக்களம், சட்டமாஅதிபர் திணைக்களத்தினுடைய அரச சட்டத்தரணி ஊடாக தோன்றியிருந்தார்கள்.

இன்றைய தினம் தாம் எந்த விதத்திலும் அங்கே சைவ மக்கள் பொங்கல் பொங்கி வழிபடதடை செய்ய இல்லை என்றும், எதிர்காலத்திலும் அவ்வாறான பொங்கல் நிகழ்வு நடைபெற்றால் அதற்கு பாதகமாக நடக்க மாட்டோம் என்றும் இன்றைய தினம் குறிப்பிட்டிருந்தார்கள்.

இன்றையதினம் ஆலய பரிபாலனசபை மக்கள் சார்பாகவும், ஊர்மக்கள் சார்பாகவும், முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் பலரும், அதிபர் சட்டத்தரணிகள் உள்ளடங்கலாக பல சிரேஷ்ட சட்டத்தரணிகள் ஆதிசிவன் ஐயனர் ஆலயம் சார்பாக இந்த வழக்கில் தோன்றியிருந்தார்கள்.

இது தொடர்பான மேலதிக கட்டளைக்காக இந்த வழக்கானது எதிர்வரும் 31.08.2023 க்கு நியமிக்கப்பட்டிருக்கின்றது" என்றார்.