கொக்குதொடுவாய் - 19 எலும்புகூட்டு தொகுதிகள் மீட்பு.

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டு இன்றையதினம் (22) மூன்றாவது நாளாகவும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற நிலையில் இதுவரை 19 எலும்புகூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

நேற்றையதினம் (21) இடம்பெற்ற அகழ்வுப் பணிகள் நிறைவடையும் போது இரண்டு மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டிருந்தது, நேற்றைய தினத்துடன் 19 எலும்புகூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக இன்றையதினமும் (22) அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இன்று (22) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி க.வாசுதேவ, தடயவியல் காவல்துறை அதிகாரிகள், கிராம சேவையாளர் ஆகியோரின் பங்கேற்புடன், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அகழ்ந்தெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளின் உடற்பகுதியில் இருந்து துப்பாக்கி சன்னங்கள், குண்டுச் சிதறல்கள் மற்றும் விடுதலைப்புலிகளின் இலக்க தகடு ஆகியன கண்டெடுக்கப்பட்டுள்ளன.

நாளை மறுதினம் (24) விசேட ஸ்கான் இயந்திரம் மூலம் இந்த மனிதப் புதைகுழியானது எவ்வளவு தூரம் வியாபித்து இருக்கின்றது, எத்தனை படைகளில் எலும்புக்கூடுகள் அடுக்கப்பட்டிருக்கின்றன எனும் தகவலை அறிவதற்காக களனி பல்கலைக்கழக தொல்பொருள் பீடத்தினரால் விஷேட ஸ்கான் இயந்திரம் மூலம் சோதனை நடைபெறவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட விஷேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்திருந்தார்.

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்த செப்ரெம்பர் மாதம் 06 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு செப்ரெம்பர் (15) வரை அகழ்வாய்வுகள் இடம்பெற்றிருந்தது.

இவ் அகழ்வுப் பணியில் 17 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்ட நிலையிலும், துப்பாக்கி சன்னங்கள், விடுதலைப் புலிகள் அமைப்பினர் பயன்படுத்தும் இலக்க தகடு, உடைகள் உள்ளிட்ட சான்றுப்பொருட்களும் மீட்கப்பட்டிருந்த நிலையில் குறித்த அகழ்வு பணியானது இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றுமுன்தினம் (20) மீண்டும் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.