கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் செப்டம்பர் 5 இல் ஆரம்பம்

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி செப்டம்பர் 5 ஆம் திகதி (05.09.2023) அன்று ஆரம்பிக்கப்படும் என நீதிமன்றில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்ச்சியாக முல்லைத்தீவு நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த நிலையில், இன்றையதினம்(31) விசேட வழக்கு இடம்பெற்றிருந்தது.

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற வழக்கு விசாரணைகளில் அனைத்து திணைக்களங்களின் சம்மதத்துடன் எதிர்வரும் 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணைகளில் முல்லைத்தீவு சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவா, யாழ்ப்பாணம் சட்ட வைத்திய அதிகாரி எஸ்.பிரணவன், சட்டத்தரணிகளான எம்.ஏ. சுமந்திரன், வி.கே.நிரஞ்சன், ரணித்தா ஞானராசா, வி.எஸ்.தனஞ்சயன், காணாமல் ஆக்கப்பட்ட அலுவலகத்தினுடைய சட்டத்தரணிகளான எஸ். துஷ்யந்தினி, ஜெ.தர்பரன், முல்லைத்தீவு மாவட்ட பிரதம கணக்காளர் ம.செல்வரட்ணம், மாவட்ட செயலக தொழில்நுட்ப உத்தியோகத்தர், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் ம.உமாமகள், கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர், கிளிநொச்சி, முல்லைத்தீவு மின் பொறியியலாளர், கரைதுறைப்பற்று பிரதேச சபை செயலாளர் கா.சண்முகதாசன், கிளிநொச்சி முல்லைத்தீவு பிராந்திய காவல்துறை மா அதிபர் சமுத்திரஜீவ, முல்லைத்தீவு உதவி காவல்துறை அத்தியட்சகர் அசோக பெரேரா, கொக்குளாய் காவல் நிலைய பொறுப்பதிகாரி, தடயவியல் காவல்துறை பிரிவினர் உள்ளிட்ட தரப்பினர் பலரும் முன்னிலையாகியிருந்தனர். 

இந்நிலையில் அனைத்து தரப்பினருடைய ஒத்துழைப்புக்களுடன் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.