அமெரிக்கா கொடுக்கும் எலும்பைக்கடிக்கும் தென்கொரியா - வடகொரிய அதிபரின் சகோதரி மிரட்டல்


அமெரிக்கா கொடுக்கும் எலும்பைக்கடிக்கும் தென்கொரியா என தென் கொரியாவுக்கு வட கொரிய தலைவரின் சகோதரி கடும் மிரட்டல் விடுத்துள்ளார்.

அமெரிக்காவும், தென்கொரியாவும் ஆண்டுதோறும் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபடுவது வடகொரியாவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் வடகொரியா தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் உள்பட பல ஏவுகணைகளைத் தொடர்ந்து ஏவி சோதித்து வருகிறது.

இந்த நிலையில் வடகொரியா மீது ஒருதலைப்பட்சமான பொருளாதாரத்தடைகளை விதிக்க பரிசீலிப்பதாக தென்கொரியா அறிவித்தது. இதுதொடர்பாக அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சகம் மேலும் கூறுகையில்,

"வடகொரியாவின் ஆயுதத்திட்டத்துக்கான புதிய நிதி ஆதாரமாக அமைந்துள்ள இணையவழிதாக்குதல்களுக்கு பதிலடி தரும் விதத்திலும், அந்த நாடு அணு ஆயுத சோதனை போன்ற பெரிய ஆத்திரமூட்டும் நடவடிக்கையை மேற்கொண்டால் பொருளாதார தடைகளையும், பிற தடைகளையும் விதிக்க பரிசீலிப்போம்" என தெரிவித்தது.

இந்த அறிக்கை, வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னின் சகோதரியும், அவரது வாரிசுமாக கருதப்படுகிற அதிகாரம் வாய்ந்த கிம் யோ ஜாங், தென் கொரியாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் ஒரு ஆவேச அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது,

அமெரிக்கா கொடுத்த எலும்பைக் கடித்துக்கொண்டு ஓடும் காட்டு நாயை விட மோசமான தென் கொரியா, வட கொரியா மீது என்ன தடைகளை விதிக்கப்போகிறது என்று ஆச்சரியப்படுகிறேன்.

என்ன, ஒரு அற்புதமான காட்சி.... எங்கள் மீதான அமெரிக்கா மற்றும் அதன் தென்கொரிய கூலிகளின் அவநம்பிக்கையான தடைகள் மற்றும் நிர்ப்பந்தங்கள், தென்கொரியா மீதான விரோதத்துக்கும், கோபத்துக்கும் எண்ணெய் ஊற்றுவது போலாகும்.

மேலும் அது அவர்களுக்கு ஒரு கயிறாக இருக்கும் என்று முட்டாள்தனமான முட்டாள்களை எச்சரிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

வட கொரியாவின, அணு ஆயுதத்திட்டம் மற்றும் ஏவுகணை திட்டங்களுக்கு நிதி வழங்கும் சட்ட விரோத நடவடிக்கைகளில் தொடர்புள்ளதாகக் கருதி, அந்த நாட்டைச் சேர்ந்த 15 தனி நபர்கள் மீதும், 16 அமைப்புகள் மீதும் தென்கொரியா சமீபத்தில் பொருளாதாரத் தடைகளை விதித்தது குறிப்பிடத்தக்கது.