யாழ்ப்பாணத்தில் கணவரின் கொலைக்கு கடற்படையும் ஒரு காரணம்: மனைவி திடீர் வாக்குமூலம்

கணவரின் இறப்பிற்கு கடற்படையும் ஒரு காரணமென வட்டுக்கோட்டையில் கொலை செய்யப்பட்ட குடும்பஸ்தரின் மனைவி கொலை தொடர்பில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொன்னாலையில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த தம்பதியரை கடத்திச் சென்று கணவரை கூர்மையான ஆயுதங்களால் வெட்டி கொலை செய்த சம்பவமொன்று இடம்பெற்றிருந்தது.

வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த 23 வயதான குடும்பஸ்தர் ஒருவர் தனது மனைவியுடன் காரைநகர் பகுதிக்கு நேற்றுமுன்தினம்(11) சென்று விட்டு, வட்டுக்கோட்டை நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த வேளையில் பொன்னாலை பாலத்திற்கு அருகில் இரண்டு வாகனங்களில் காத்திருந்த சுமார் 15 பேர் கொண்ட குழுவினர் அவர்களை அச்சுறுத்திய நிலையில் குறித்த இளைஞன் தனது மனைவியுடன் கடற்படை முகாமினுள் சென்று அடைக்கலம் கோரியுள்ளார்.

இந்நிலையில் கடற்படையினர்  அங்கிருந்து வெளியேறுமாறு தம்பதியினரை கலைத்துள்ளனர்.

கடற்படை முகாம் முன்னே நின்ற வன்முறை கும்பல் கணவனை ஒரு வாகனத்திலும் மனைவியை மற்றைய வாகனத்திலும் கடத்திச் சென்றதுடன் மனைவியை அராலி பகுதியில் இறக்கி விட்டுள்ளனர்.

மேலும் அவரது கணவன் மீது வன்முறைக்கும்பல் கடுமையான தாக்குதலை மேற்கொண்டு வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள வைத்தியசாலை ஒன்றின் முன்பாக படுகாயங்களுடன் வீசி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

இதையடுத்து அவரை மீட்ட வைத்தியசாலை பணியாளர்கள் நோயாளர் காவு வண்டி ஊடாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார்.

இவ்வாறானதொரு நிலையில் "உயிரைக் காப்பாற்றும்படி கெஞ்சிய எம்மை கடற்படை காப்பாற்றியிருந்தால் என் கணவர் கொலையுண்டிருக்க மாட்டாரென  வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற கொலைச்சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரினுடைய மனைவி குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் தெரிவித்த அவர் 'என் கணவரின் சாவுக்கு கடற்படையும் ஒரு காரணம்' எனவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை குறித்த இளைஞனின் இறப்பு தொடர்பில் சட்டமருத்துவ அதிகாரி உ.மயூரதன் நேற்று அறிக்கையிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில், கூரிய ஆயுதங்களால் கொடூரமாகச் சித்திரவதை செய்யப்பட்டும் மற்றும் மூச்சுக் குழாய்க்குள் குருதி சென்றதாலும்தான் இறப்புச் சம்பவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.