கள்ளப்பாடு பாடசாலையில் பதட்டம்..! மாணவர்களை கடத்த முயற்சித்த மர்ம நபர்கள்


முல்லைத்தீவு - கள்ளப்பாடு பாடசாலையில் மர்ம நபர்கள் 4 மாணவர்களை கடத்த முயற்சி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால், குறித்த பாடசாலையில் பதட்ட நிலை ஏற்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் மர்ம நபர்கள் தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முல்லைத்தீவு - திருகோணமலை வீதியில் (முல்லைத்தீவில் இருந்து 2km) ஒதுக்குப்புறமான பாடசாலை ஒன்றில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

4 பேர்கொண்ட கும்பலே இவ்வாறு கடத்த முற்பட்டுள்ளதாக தெரிவிக்கும் அப்பகுதி மக்கள், அவர்கள் வெள்ளைக்காரர்களாக இருந்ததாகவும் கூறுகின்றனர்.

குறித்த நபர்கள் அருகில் உள்ள காட்டுப்பகுதிக்குள் தப்பி ஓடியுள்ள நிலையில், அப்பகுதி மக்கள் தீவிர  தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

இதேவேளை, மதவாச்சி, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களிலும் இருவேறு கடத்தல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

மதவாச்சி காவல்துறை பிரிவுக்குட்பட்ட நகருக்கு அருகில் 16 வயது சிறுமியை பலவந்தமாக அழைத்துச் செல்ல முற்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இச்சம்பவம் குறித்து சிறுமியின் தாயார் மதவாச்சி காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு, யாழ்ப்பாணம் - நாவாந்துறை பகுதியில் சிறுவர்களை கடத்த முயன்றார் என அப்பகுதி மக்களால் நபர் ஒருவர் மடக்கி பிடிக்கப்பட்டு , யாழ்ப்பாண காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

நாவாந்துறை பகுதியில் இன்றைய தின இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காவல்துறையினரிடம் மக்களால் ஒப்படைக்கப்பட்ட நபரை காவல்துறையினர்  காவல் நிலையத்தில் தடுத்து வைத்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.