யாழ்ப்பாண மாநகர சபையின் கழிவகற்றும் வாகனங்களை மறித்து கல்லூண்டாய் பகுதி மக்களும் இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ்ப்பாணம் மாநகர சபையினரால் சேகரிக்கப்படும் கழிவுகளை மானிப்பாய் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட கல்லூண்டாய் பகுதியில் கொட்டுவதனை நிறுத்துமாறு கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது மாநகர சபை கழிவுகளை ஏற்றிவந்த உழவியந்திரங்கள் கல்லுண்டாய் பகுதியில் மக்களால் வழிமறிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டன.
கல்லுண்டாய் பகுதி குப்பை மேட்டில் நேற்றை தினம் சனிக்கிழமை இரவு திடீரென தீ பிடித்தமையால் ஏற்பட்ட புகை மண்டலாத்தால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமங்களை எதிர் கொண்டதுடன், சுவாச பிரச்சனை உடையவர்கள் சிறு பிள்ளைகளை கொண்ட குடும்பத்தினர் தமது வீடுகளில் இருந்து வெளியேறி நண்பர்கள் உறவினர் வீடுகளில் தங்கியுள்ளனர்.
கல்லுண்டாய் பகுதியில் குப்பைகளை கொட்டுவதனால் அயலில் வசிக்கும் மக்கள் சுகாதார பிரச்சனைகள் உள்ளிட்ட பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருவதுடன், நிலத்தடி நீரும் மாசடைவதால் அயல் கிராம நன்னீர் நிலைகளும் பாதிக்கப்பட்டு வருவதானல் குப்பைகளை கேட்ட வேண்டாம் என பல வருட காலமாக அப்பகுதி மக்கள் கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர்.
பல்வேறு சந்தர்பங்களிலும் போராட்டங்களில் ஈடுபட்ட போதிலும், அரசியல்வாதிகள், அதிகாரிகளின் வாக்குறுதிகளை நம்பி போராட்டங்களை தற்காலிகமாக இடைநிறுத்தியும் வந்திருந்தனர்.
ஆனாலும் மக்களின் எதிர்ப்புக்களையும் மீறியும் தொடர்ந்து மாநகர சபை கல்லுண்டாய் பகுதியிலையே குப்பைகளை கொட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.