அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ஜூலியன் அசாஞ்சே - இங்கிலாந்து சிறையில் இருந்து விடுதலை

விக்கி லீக்ஸ் நிறுவன தலைவர் ஜூலியன் அசாஞ்சே இங்கிலாந்து சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.


ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் அமெரிக்கா நடத்திய போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், ஊழல் தொடர்பான இரகசிய ஆவணங்களை ஹேக் செய்து ஜூலியன் அசாஞ்சே விக்கிலீக்ஸ் இணையத்தளத்தில் வெளியிட்டார்.
 
இந்த சம்பவம் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, ஜூலியன் அசாஞ்சேவை தேடப்படும் குற்றவாளியாக அமெரிக்கா அறிவித்தது.

இந்த விவகாரத்தில் அமெரிக்கா கொடுத்த நெருக்கடிகளின் காரணமாக இங்கிலாந்தில் உள்ள ஈகுவடோர் தூதரகத்தில் தஞ்சம் அடைந்த அசாஞ்சே, கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார்.
 
பின்னர் அவர் லண்டனில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். உளவு குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவிற்கு கொண்டு வரும் சட்ட நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு ஆரம்பித்தது.

இதையடுத்து, ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவிற்கு நாடு கடத்தும்படி இங்கிலாந்து அரசு 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் உத்தரவிட்டது.
 
அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்து அசாஞ்சே இங்கிலாந்து நீதிமன்றில் முறையீடு செய்தார். இந்த வழக்கு விசாரணை இங்கிலாந்து நீதிமன்றில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இங்கிலாந்து சிறையில் இருந்து ஜூலியன் அசாஞ்சே இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
 
அமெரிக்க ராணுவ ரகசிய ஆவணங்களை விக்கி லீக்சில் வெளியிட்ட குற்றத்தை ஒப்புக்கொள்வதாக ஜூலியன் அசாஞ்சே தெரிவித்தார்.
 
இந்த வழக்கு தொடர்பாக அமெரிக்காவில் முன்னிலையாகவும் ஒப்புக்கொண்டுள்ளார்.