யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் வைத்து கைது செய்யப்பட்ட இருவர்: வெளியான காரணம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் மது போதையில் நுழைந்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் முரண்பட்டு உள்ளே செல்ல முயன்ற இருவர் யாழ்ப்பாணம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவமானது நேற்று(24)மாலை இடம்பெற்றுள்ளது.

இது சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நோயாளி ஒருவரை பார்வையிடுவதற்காக வைத்தியசாலை வளாகத்திற்குள் மது போதையில் அத்துமீறி நுழைந்த இருவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் முரண்பட்டு வளாகத்துக்குள் உள்நுழைந்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் வைத்தியசாலை பணிப்பாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், யாழ்ப்பாணம் காவல்துறையினருக்கு தகவலளிக்கப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இருவரையும் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நோயாளிகளை பார்வையிட வருபவர்கள் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் முரண்படும் நிலைமை தற்போது அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.