யாழில் காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்ட இளைஞன்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு உயிரிழந்த நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் தொடர்பிலான வழக்கு விசாரணைக்காக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது

இந்த வழக்கு விசாரணையானது நேற்றைய தினம் (02) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் இடம்பெற்றது.

இந்த வழக்கு விசாரணை குறித்து மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு உயிரிழந்த நாகராசா அலெக்ஸ் இன் பிரேத பரிசோதனை அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

அதில் குறித்த இளைஞன் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட காயங்கள் உடலில் காணப்பட்டதாகவும் இதனால் உயிரிழப்பு நேர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வழக்குடன் தொடர்புபட்ட 21 சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது, இதன் முதல் தோற்ற அடிப்படையில் இது மனித ஆட்கொலை என நீதிபதி தெரிவித்தார்.

தவிரவும் இரண்டாவது சாட்சியாக ஐந்து காவல்துறையினரால் சித்திரவதை செய்ததாக தெரிவித்த நிலையில், ஐந்தாவது சந்தேக நபரையும் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தி மன்றில் முன்னிலைப்படுத்துமாறு இந்த வழக்கின் விசாரணைப் பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டார்.

மேலும் குறித்த குற்றத்தில் காவல்துறையினர் சம்மந்தப்பட்டிருப்பதால் நீதிமன்ற கட்டளையின் பிரதியை காவல்துறைமா அதிபருக்கு அனுப்புமாறு நீதிமன்றம் கட்டளையிட்டது.

இது சித்திரவதைக்கு உள்ளான மனித ஆட்கொலை வழக்கு என்பதால் மேல் நீதிமன்றத்திலேயே இறுதியான தீர்ப்பை பெற்றுக்கொள்ள முடியும் எனத் நீதிபதி தெரிவித்தார்.

தவிரவும் வழக்கின் குற்றப் பத்திரத்தினை மேல் நீதிமன்றில் தாக்கல் செய்வதற்கு சட்டமா அதிபருக்கு அறிவுறுத்தியதுடன் மூல வழக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்குமாறு மன்றின் பதிவாளருக்கு நீதவான் உத்தரவிட்டார்.

மேலும் சந்தேக நபர்கள் நால்வரையும் எதிர்வரும் 16ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது