மந்தகதியில் செயற்படும் யாழ் பொலிஸார்: சிறீதரன் எம்.பி குற்றச்சாட்டு


யாழ்ப்பாண மாவட்டத்தில் பொலிஸாரின் செயற்பாடு மந்தகதியில் இடம் பெறுவதை அவதானிக்க முடிகின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத மணல் கடத்தல் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் இன்று(26)யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஆராயப்பட்டபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“அண்மைய நாட்களில் பொலிஸாரின் செயற்பாட்டினை பார்க்கும்போது எதற்கு எடுத்தாலும் இராணுவத்தினரை பயன்படுத்த வேண்டும் எனக் கூறுகின்றார்கள்.

குறிப்பாக யாழ் மாவட்டத்தில் பொலிஸாரின் செயற்பாடு மந்தகதியில் இடம் பெறுவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

அதாவது இராணுவத்தினை யாழில் தொடர்ச்சியாக இங்கே நிலை நாட்டுவதற்காக கூட இந்த செயற்பாடுகள் அமைந்திருக்கலாம்.கொழும்பில் ஜனாதிபதிக்கு எதிராக ஒருவர் முகப்புத்தகத்தில் பதிவிட்டால் உடனே கைது செய்கின்றார்கள்.

போராட்டம் நடத்தினால் கைது செய்கிறார்கள் ஆனால் யாழ்ப்பாணத்தில் அச்சுறுத்தும் வகையில் பட்டப்பகலில் கூடி கேக் வெட்டியவர்களை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்ட போதும் இன்று வரை 8 பேரை மட்டுமே கைது செய்துள்ளார்கள்.

இதிலிருந்து எமக்கு ஒன்று புரிகின்றது. பொலிஸாரின் செயற்பாடு மிக மந்தகதியில் உள்ளது அதாவது யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரை நிலை நாட்டுவதற்காகவே பொலிஸார் இவ்வாறு செயல்படுகிறார்களா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

எனவே இந்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லாதுவிட்டால் பொலிஸ் அதிகாரத்தினை மாகாணத்திடம் தாருங்கள்”என தெரிவித்துள்ளார்.