யாழ். வீரருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வாய்ப்பு

கிரிக்கட் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிக்க தொடரான இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் வீரரொருவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் தேசிய கிரிக்கெட் வீரர்களின் முகவராகச் செயற்படும் அமில கலுகலகே தனது டுவிட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ளார்.

அவரது டுவிட்டர் பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 17 வயது இளம் வீரர் ஒருவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வலைப்பந்துவீச்சாளராக ஒப்பந்தம் செய்யப்படவுள்ளார்.

மார்ச் 19, 2024 அன்று சென்னை சூப்பர்கிங்ஸ் குழாமில் வலைப்பந்து வீச்சாளராக சேர இருக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வீரரின் பெயரை விரைவில் வெளியிடுவோம்.

மேலும், அவரது பெற்றோர், பாடசாலை , கல்வி அமைச்சர் மற்றும் இலங்கை கிரிக்கட் பேரவை ஆகியோரிடம் இருந்து அனுமதி பெறப்பட்டுள்ளது." என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 தொடர்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள நிலையில் அடுத்ததாக ஐ.பி.எல் தொடரின் 17ஆவது தொடர் மார்ச் மாதம் இறுதியில் ஆரம்பமாகவுள்ளது.

இதுவரை நடந்து முடிந்துள்ள ஐ.பி.எல் தொடர்களில் அதிகபட்சமாக சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 5 முறை கிண்ணங்களை வென்றுள்ளன.

நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் ஐ.பி.எல். தொடரின் அட்டவணை, வெளியாகியுள்ளது.

முதற்கட்டமாக 15 நாட்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.