யாழ். உயர் பாதுகாப்பு வலய காணி விடுவிப்பு - இளங்குமரன் எம்.பி வழங்கிய உறுதிமொழி


புதிய இணைப்பு

யாழ். (Jaffna) உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள பலாலி கிழக்கு பகுதியை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் (K. Ilankumaran) தெரிவித்துள்ளார்.

உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நேற்றைய தினம் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

குறித்த வழிபாட்டில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மக்களை மீள் குடியமர்த்த நடவடிக்கை

மேலும் தெரிவிக்கையில், இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு தினமும் வந்து வழிபட தற்காலிகமாக ஒரு பாதை அமைக்கப்பட்டுள்ளது.

அந்த பாதையில் சென்று அம்மனை வழிபட முடியும். விரைவில் ஆலயத்திற்கு செல்லும் வீதி விடுவிக்கப்படும்.

அதேவேளை பலாலி கிழக்கு பகுதியை உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து விடுவித்து, காணிகளை காணி உரிமையாளர்களிடம் கையளிக்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். இராணுவத்தினரும் அதற்கான நல்லெண்ண சமிக்ஞைகளை காட்டியுள்ளனர்.

 தற்போது இப்பிரதேசம் காடுகளாக காணப்படுகிறது. விரைவில் மக்கள் மீள் குடியமர்த்தப்பட்டு செழிப்பான பிரதேசமாக மாறும் என க. இளங்குமரன் (K. Ilankumaran) தெரிவித்துள்ளார்.



முதலாம் இணைப்பு 

உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள யாழ். பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்றன.

குறித்த அம்மன் ஆலயத்தில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் விசேட தினங்களில் மாத்திரம் ஆலயத்திற்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்  ஞாயிற்றுக்கிழமை முதல் குறித்த ஆலயத்திற்கு தினமும் சென்று வழிபாடு செய்வதற்கு இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர்.

இனிவரும் நாட்களில மக்கள் சுதந்திரமாக ஆலயத்துக்கு சென்று வழிபட முடியுமென்றும் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் இராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் விசேட பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டனர்.