யாழில் சிறுமியின் கை துண்டிக்கப்பட்ட விவகாரம்: நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு


யாழ்ப்பாணத்தில் கை துண்டிக்கப்பட்ட சிறுமியின் கையை கொழும்புக்கு அனுப்பி மேலதிக பரிசோதனைகளை மேற்கொள்ள யாழ்.நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு கையில் பொருத்தப்பட்ட "கானுலா" உரிய முறையில் பொருத்தப்படாததால், சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகம் , மத்திய சுகாதார அமைச்சு என்பன விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், சிறுமியின் பெற்றோரால் யாழ்ப்பாண காவல் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய , காவல்துறையினர் யாழ்.நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து, வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று(13) குறித்த வழக்கு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நீதிமன்றினால் அமைக்கப்பட்ட விசாரணைக்குழு விசாரணைகள் முடிவடையவில்லை எனவும், அதற்கு தமக்கு மேலதிகமாக 10 நாட்கள் தேவை எனவும் நீதிமன்றில் தெரிவித்தனர்.

அதனை அடுத்து, துண்டிக்கப்பட்ட கையின் பாகத்தை காவல்துறையினர் ஊடாக கொழும்புக்கு அனுப்பி மேலதிக பரிசோதனைகளை மேற்கொண்டு, அது தொடர்பிலான அறிக்கையை பெறவும் மன்று உத்தரவிட்டுள்ளது.

மேலும், வழக்கினை எதிர்வரும் 23ஆம் திகதிக்கு திகதிக்கு ஒத்திவைத்தது.