யாழில் போதைப்பொருள் கடத்தலில் ஐவர் கைது - ஒன்றரை கோடி பணம் மீட்பு

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் கடத்தலில் கைது செய்பட்ட ஐந்து சந்தேக நபர்களிடம் இருந்து ஒன்றரை கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடந்த (29) மற்றும் (30) ஆகிய தினங்களில் கடற்படையினர், காவல்துறை விசேட அதிரடி படையினர் மற்றும் காவல்துறை ஆகியோர் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில், சந்தேகத்திற்கு இடமான கெப் ரக வாகனத்தை சோதனையிட்ட போது, அந்த வாகனத்தின் பெட்டியின் கீழ் மேலுமொரு பெட்டி அடிக்கப்பட்டு, கடத்தலுக்கு ஏதுவாக வாகனம் மாற்றி அமைக்கப்பட்டு இருந்துள்ளது.

அதனை தொடர்ந்து, வாகனத்தில் பயணித்த இருவரையும் கைது செய்ததோடு, விசாரணைகளின் அடிப்படையில் மேலும் மூன்று சந்தேக நபர்களையும் கைது செய்தனர்.

சந்தேக நபர்கள் உரும்பிராய், மாதகல் மற்றும் குடா ஓயா ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும், அவர்களிடம் இருந்து கெப் ரக வாகனம், மோட்டார் சைக்கிள் மற்றும் 15 மில்லியன் ரூபாய் பணம் என்பன மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர்களும், மீட்கப்பட்ட பொருட்களும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கோப்பாய் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.