பற்றி எரிந்த யாழ் கொழும்பு சொகுசு பேருந்து - அம்பலமானது களவுத்தனம்

 யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த சொகுசு பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கடந்த 30 ஆம் திகதி சென்ற குறித்த பேருந்தை, மூன்று கோடி ரூபா பெறுமதியான காப்புறுதியை பெற்றுக் கொள்வதற்காவே உரிமையாளர் திட்டமிட்டு பேருந்திற்கு தீ வைத்ததாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த பேருந்து தீப்பிடிப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர், கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வரும் வழியில் இலுப்பையடி சந்தியில் அமைந்துள்ள வாகனம் திருத்தும் நிலையம் ஒன்றில் நிறுத்தப்பட்டுள்ளது.

அங்கு பேருந்தில் உள்ள மிகவும் பெறுமதியான பாகங்கள் மற்றும் உதிரிபாகங்கள் அகற்றி எடுக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்த உதிரிபாகங்கள் அனைத்தும் சேமிப்பு அறையில் வைக்கப்பட்டு, அதை மூடி பூட்டி வைக்கப்பட்டுள்ளது.

பேருந்தில் கூடுதல் கருவி பொருத்தப்பட்டு, அதன் என்ஜின் அதிக வெப்பம் அடைந்தவுடன் தீப்பிடிக்கும் வகையில் அமைக்கப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது.

தீப்பிடித்த பேருந்து யாழ்ப்பாணத்தில் இருந்து புத்தளம் மதுரங்குளிக்கு வந்ததாகவும், புத்தளத்தில் தேநீர் அருந்துவதற்காக பேருந்தை நிறுத்திய போது அதில் எவ்வித தொழில்நுட்ப கோளாறுகளும் காணப்படவில்லை என பேருந்தில் பயணித்த பலர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.

ஒரே நேரத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததா என்ற சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் மற்றும் மோட்டார் ஆய்வாளர்கள் நடத்திய விசாரணையில், பேருந்துக்கான மூன்று கோடி ரூபாய் காப்புறுதி தொகையைப் பெறுவதற்காக வேண்டுமென்றே பேருந்துக்கு தீ வைக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பேருந்து தீ விபத்து தொடர்பான விசாரணை இன்னும் நிறைவடையாத நிலையில், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.