யாழில் தொடரும் கவனயீன விபத்துக்கள்: பொதுமக்கள் விசனம்


யாழ்ப்பாணத்தில் பேருந்துகளின் மிதிபலகையில் இருந்து தவறி விழுந்து கடந்த வாரம் மாத்திரம் இரண்டு மரணங்கள் பதிவான நிலையிலும் அதனை யாரும் கருத்தில் கொண்டு பொறுப்புடன் செயற்படுவதாக தெரியவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாண நகரில் இருந்து காரைநகர் நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பயணிகள் பேருந்து மிதிபலகையில் தொங்கியவாறு சென்றநிலையில் அருகில் தரித்து நின்ற வாகனத்துடன் மோதி கீழே விழுந்துள்ளனர்.

இதனை அவதானித்த அங்கிருந்த பொது மகனொருவர் எடுத்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது

கடந்த 19 ம் திகதி அல்லைப்பிட்டியில் மூதாட்டி ஒருவரும் கடந்த 23 ம் திகதி நல்லூர் பகுதியில் இளைஞர் ஒருவரும் பேருந்தில் இருந்து விழுந்து உயிரிழந்தனர்.

"இவ்வாறு பேருந்து மிதிபலகையில் தொங்கியவாறு சென்று விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்பு நடந்தால் யார் பொறுப்பு. விபத்து இடம்பெற்ற பின்னர் சட்ட நடவடிக்கை எடுக்காது, விபத்து ஏற்படுவதற்கு முன்னர் இவ்வாறு பேருந்துகளில் தொங்கியவாறு சென்றால் பேருந்து சாரதி மற்றும் நடத்துனருக்கு எதிராக போக்குவரத்து காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பொதுமக்கள், கோரியுள்ளனர்.

மேலும், வீதிகளில் மறைந்து நின்று குற்றம் நிகழ்ந்த பின்னர் தண்டப்பணம் அறவிடும் போக்குவரத்து காவல்துறையினர், ஒழுங்காக கடமையை செய்தால் இவ்வாறு அசம்பாவிதங்கள் ஏற்படாது - என்றனர்.

அதிக பயணிகளை யார் ஏற்றுவது என்பதில் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் இடையேயான போட்டி காரணமாக விபத்து, உயிரிழப்பு என பல அசம்பாவிதங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் பொதுப் போக்குவரத்து ஆணைக்குழு, இலங்கை போக்குவரத்து சபை, தனியார் பேருந்து உரிமையாளர்கள், பேருந்து சாரதிகள், காவல்துறையினர், போக்குவரத்து காவல்துறையினர், பயணிகள், பொதுமக்கள் என அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்வதே இன்னுமொரு உயிரிழப்பை தடுக்க உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.