தமிழர்களிடம் வாக்கு கேட்க முன் ஐே.வி.பி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்...! சபா.குகதாஸ் வேண்டுகோள்...!

தமிழர்களிடம் வாக்கு கேட்க முன் ஐே.வி.பி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என  வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா.குகதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும்  தெரிவிக்கையில்,

அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே.வி.பியினர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசியம் சார்ந்த கட்சிகள் பிரதிநிதிகளை சந்திக்க ஆரம்பித்துள்ளனர்.

அது அவர்களின் ஐனநாயக உரிமை ஆனால் தமிழர்களுடன் ஐே.வி.பி பேசுவதற்கு முன்பாக பிரதான இரண்டு விடயத்தை தெளிவுபடுத்த வேண்டும்.

ஒன்று ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்று அவர்கள் கோரி நிற்கும் சமஸ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இரண்டாவது ஐே.வி.பியின் முன்னாள் தலைவர் றேஹண விஐயவீர, ஈழத் தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளவில்லை. அத்துடன் 2006 இணைந்த வடகிழக்கு மாகாணங்களை சட்டரீதியாக பிரிப்பதற்கு ஐே.வி.பியின் உயர்நீதிமன்ற வழக்கே காரணமானது.

2009 முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலைக்கு தென்னிலங்கையில் சாரை சாரையாக சிங்கள இளைஞர்களை இராணுத்தில் இணைவதற்கு தமிழர்களை அழிக்க வேண்டும் என்ற வெறித்தனமான பிரசாரத்தை மேற்கொண்டதுடன் யுத்த வெற்றியை ராஐபக்ச குடும்பத்துடன் பாற்சோறு வழங்கி கொண்டாடியது தாங்கள் தமிழர்களுக்கு செய்த தவறு.

அதற்கான நீதி கிடைக்க பகிரங்க மன்னிப்பு அனுரகுமார தலைமையிலான கட்சி தமிழர்களிடம் கேட்க வேண்டும்.

ஆட்சி அதிகாரத்தை பெறுவதற்காக சிங்கள மக்களிடம் தங்களை இனவெறியர்களாக காட்ட அண்மையில் அனுரகுமார கூறிய கருத்து மிக மோசமானது. அதாவது தமிழர்களிடம் தென்னிலங்கையர் சமஸ்டி  மற்றும் பதின்மூன்றாம் திருத்தம் தொடர்பில் பேசக் கூடாது இதன் மூலம் ஐே.வி.பியின் இனவாத முகம் நிரூபணமாகியுள்ளது எனவும் தெரிவித்தார்.